செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற நபர்கள், காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பியோடினர்.
கீழவலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் முன்பு இருந்த சிசிடிவி கேமராவை திருப்பிவிட்டு 5 பேர் கொண்ட கும்பல் கடையின் பூட்டை உடைத்துள்ளனர். சந்தேகத்தின்பேரில் விசாரணைக்கு சென்ற இரண்டு காவலர்களையும் தாக்கிவிட்டு, 5 இருசக்கர வாகனங்களில் கொள்ளையர்கள் 5 பேரும் தப்பியுள்ளனர்.
எனினும் அங்கு விரைந்த கூடுதல் காவல்துறையினர் சாலையில் மடக்கி பிடிக்க முயன்றபோது, இருசக்கர வாகனங்களை போட்டுவிட்டு தப்பியோடினர். இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் தாக்குதலில் காயமடைந்த இரு காவலர்களும் சிகிச்சை பெற்றனர்.