பிரார்த்தனைக்கு சென்ற இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: POCSO-வில் தூத்துக்குடி மதபோதகர் கைது!

தூத்துக்குடி மாவட்டத்தில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகர் கைது செய்யப்பட்டார்.
கைதான வினோத் ஜோஸ்வா
கைதான வினோத் ஜோஸ்வாPT Tesk

வேலூர் மாவட்டம் எழில்நகர் காந்தி தெருவை சேர்ந்தவர் வினோத் ஜோஸ்வா (40). இவர் கடந்த 10 ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறை அடுத்த கீழக்கோட்டை சின்னகுளம் பகுதியில் உள்ள ஒரு திருச்சபையில் போதகராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் இவர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு திருச்சபையில் வைத்து போதனை வகுப்புகளும் நடத்தி வந்துள்ளார்.

சின்னகுளம் திருச்சபை
சின்னகுளம் திருச்சபை

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அந்த திருச்சபைக்கு பிரார்த்தனைக்கு சென்று வந்துள்ளார். மேலும் அங்கு நடைபெறும் வகுப்பிலும் பங்கேற்றுள்ளார். அப்போது அந்த இளம்பெண்ணுடன் பழகிய போதகர் வினோத் ஜோஸ்வா கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

மேலும் அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். பின்னர் இதனை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக அந்த இளம்பெண்ணை, போதகர் மிரட்டி உள்ளார். இதனால் அவர் யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு அந்த இளம்பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இருந்த போதிலும் வினோத் ஜோஸ்வா தொடர்ந்து போன் மூலமாக தொந்தவு செய்து வந்ததால் மிகவும் பாதிக்கப்பட்ட இந்த இளம்பெண் தனது குடும்பத்தினரிடம் அழுதவாறே நடந்தவற்றை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இது தொடர்பாக கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

கைதான வினோத் ஜோஸ்வா
கைதான வினோத் ஜோஸ்வா

புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் கோகிலா இதுகுறித்து விசாரணை நடத்தினார். அதில் 5 ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண், சிறுமியாக இருந்த போதே அவரிடம் போதகர் பாலியல் தொந்தரவு செய்து வந்ததும், பின்னர் அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போச்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் போதகர் வினோத் ஜோஸ்வாவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com