ரியல் எஸ்டேட் அதிபர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேர் சரண் அடைந்தனர்.
கோவை சுங்கம் சிவராம் நகரைச் சேர்ந்த கோபாலின் மகன் வினோத்குமார் (36). இவர் ரியல் எஸ்டேட் மற்றும் ஆட்டோமொபைல் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், செல்வபுரம் தேவேந்திர காலனியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பின்னர் வீட்டுக்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருந்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வினோத்குமாரை வெட்டினர். அப்போது அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து செல்வபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த குண்டுராஜன் என்கிற ராஜன் (38), செல்வராஜ் (37) ஆகியோர் செல்வபுரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். கள்ளக்காதல் தொடர்பாக இந்தக் கொலை நடந்ததாக போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.