ரியல் எஸ்டேட் புரோக்கர் ஓட ஓட வெட்டிக் கொலை : அம்பத்தூரில் பட்டப்பகலில் பயங்கரம்

ரியல் எஸ்டேட் புரோக்கர் ஓட ஓட வெட்டிக் கொலை : அம்பத்தூரில் பட்டப்பகலில் பயங்கரம்
ரியல் எஸ்டேட் புரோக்கர் ஓட ஓட வெட்டிக் கொலை : அம்பத்தூரில் பட்டப்பகலில் பயங்கரம்

அம்பத்தூரில் ரியல் எஸ்டேட் புரோக்கர் மர்மநபர்களால் ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு, மேட்டு தெருவைச் சேர்ந்தவர் வீரமணி (46). இவர், ரியல் எஸ்டேட் புரோக்கராக இருந்தார். இவரது மனைவி மகாலட்சுமி (40). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், இன்று காலை 10 மணி அளவில் வீரமணி வீட்டு அருகேயுள்ள கழிவறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது, அங்கு ஆட்டோவில் 3 பேர் வந்து வீரமணியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்பு, அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து வீரமணியை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதனையடுத்து, அவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து ஓடி உள்ளார். இருந்த போதிலும் அக்கும்பல் அவரை விடாமல் துரத்தி ஓட, ஓட சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில், படுகாயம் அடைந்த வீரமணி தரையில் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அந்த மர்ம கும்பல் அங்கிருந்து ஆட்டோவில் தப்பிச் சென்றனர். தகவல் அறிந்து, வீரமணி உறவினர்களும் பொதுமக்களும் அங்கு திரண்டனர். இது குறித்து பொதுமக்கள் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் போலீஸ் உதவி கமிஷனர் கண்ணன், அம்பத்தூர் தொழிற்பேட்டை இன்ஸ்பெக்டர் பரணிகுமார் ஆகியோர் தலைமையில் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இந்த கொலைக்கு நிலத்தகராறு அல்லது முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என சந்தேகின்றனர். பட்டப்பகலில் வீட்டு முன் ரியல் எஸ்டேட் புரோக்கரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் அம்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com