பட்டப்பகலில் ரேசன் கடைக்குள் ஊழியர் வெட்டிக் கொலை
மதுரை வாழைத்தோப்பு பகுதியில் பட்ட பகலில் ரேசன் கடைக்குள் புகுந்து பணியிலிருந்த ஊழியரை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை வாழைத்தோப்பு பகுதியில் பள்ளிவாசல் எதிரே ஸ்ரீ மீனாட்சி பண்டக சாலை என்னும் ரேசன் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மதுரை காமராஜர்புரம் பகவத்சிங் தெருவைச் சேர்ந்த குமரேசன் மகன் முனியசாமி என்பவர் பகுதி நேர ரேசன் கடை ஊழியராக பணியாற்றி வந்தார். இன்று காலை 8 மணியளவில் ரேசன் கடையை திறந்த முனிசாமி ரேசன் பொருட்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து கொண்டிருந்தார். அப்போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவசர அவசரமாக ரேசன் கடை வாசலில் வண்டியை நிறுத்தி ரேசன் கடைக்குள் புகுந்தனர்.
பின்னர் அங்கு பணியிலிருந்த முனிசேகரை அந்த 5 பேர் கொண்டு கும்பல் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு உடனடியாக அந்த இடத்தில் இருந்து தப்பினர். இதனால் அங்கிருந்தவர்கள் பதட்டத்தில் அலறினர். தகவல் அறிந்ததும் மதுரை மாநகர காவல்துறை இணை ஆணையர் சசிமோகன் தலைமையில் காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் முனிசேரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அத்தோடு மோப்ப நாய், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொல்லப்பட்ட முனுசாமிக்கு சுமதி என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகள் மற்றும் 5 வயதில் ஒரு மகன் உள்ளனர். ரேசன் கடை ஊழியர் முனுசாமி பணியில் இருந்த போது வெட்டிக் கொலை செய்யப்பட்டதால் அப்பகுதி முழுவது பரப்பரப்பாக காணப்பட்டது.