நோயை குணமாக்குவதாக கூறி பாலியல் வன்கொடுமை: போலி சாமியார் கைது!
நோயை குணமாக்குவதாகக் கூறி, பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த போலி சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் சதாராவைச் சேர்ந்தவர் உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 2 குழந்தைகள். கடந்த 2008-ம் ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டது. கணவர், உமாவின் அம்மா வீட்டில் அவரை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். குழந்தைகளும் அவரைப் பார்க்க வருவதில்லை. தொடர்ந்து அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், உமாவின் உறவினர் மூலம் ஹதராலி ஷேக் என்பவர் இரண்டு வருடத்துக்கு முன் அறிமுகமானார். இவர் அப்பகுதியில் உள்ள சாமியாராம்.
உடல்நிலையை குணப்படுத்துகிறேன் என்று உமாவிடம் வாக்குக் கொடுத்த சாமியார், ஒரு நாள் தீர்த்தம் என்று திரவம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். குடித்த உமா, மயக்கமடைந்துவிட்டார். இதைப் பயன்படுத்தி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் சாமியார். மயக்கம் தெளித்த உமா, தான் நிர்வாணமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், அவரிடம் நடந்த சம்பவத்தை வீடியோ எடுத்துள்ளதாகவும் வெளியே யாரிடமாவது சொன்னால், அதை வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
பயந்து போன உமா, யாரிடமும் இதைச் சொல்லவில்லை.
இப்படி மிரட்டியே பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார் சாமியார். பிறகு அவரிடம் இந்து 300 கிராம் தங்க நகைகளை அபகரித்துள்ளார். பிறகுதான், தான் ஏமாற்றப்படுவதாக உணர்ந்தார் உமா. போலீசில் புகார் கொடுக்கச் சென்றவரை மறித்து, ’நான் உன்னை திருமணம் செய்துகொள்கிறேன்’ என்று உறுதி கூறியிருக்கிறார் சாமியார். ஆனால் அவர் சொன்னதை செய்யவில்லை. இதையடுத்து சதாரா போலீஸ் நிலையத்தில் நேற்று முன் தினம் புகார் கொடுத்தார் உமா. போலீசார் சாமியாரை கைது விசாரித்து வருகின்றனர்.