ராமநாதபுரம்: ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்ததாக இருவர் கைது
செய்தியாளர்: அ.ஆனந்தன்
ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சக்கரக்கோட்டை அப்துல்கலாம் நகர் டாஸ்மாக் கடை அருகே சோதனை செய்யப்பட்டது. அப்போது கடையின் பின்புறம் சந்தேகப்படும் படி நின்றிருந்த இருவர், போலீசாரை பார்த்தவுடன் தப்பியோட முயன்றுள்ளனர். அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது இருவரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்ததால் அவர்களை சோதனையிட்ட போது அவர்களிடம் ரூ.1 லட்சம் மதிப்பிலான 13 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போதைப் பொருளை பறிமுதல் செய்த போலீசார், இரண்டு இருசக்கர வாகனம், செல்போன் மற்றும் 20 ஆயிரம் பணத்தையும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ராமநாதபுரம் சிவஞானபுரம் ரோட்டை சேர்ந்த ஹமீது அஹமது (21), காட்டூரணி தங்கப்பாபுரத்தைச் சேர்ந்த ஹபீப் முகமது (22), என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.