“மதனை நல்லா கவனிச்சுக்குங்க; பணம் ரெடி பண்ணிடுறேன்” உலா வரும் ஆடியோக்கள்-அதிர்ச்சி பின்னணி

“மதனை நல்லா கவனிச்சுக்குங்க; பணம் ரெடி பண்ணிடுறேன்” உலா வரும் ஆடியோக்கள்-அதிர்ச்சி பின்னணி

“மதனை நல்லா கவனிச்சுக்குங்க; பணம் ரெடி பண்ணிடுறேன்” உலா வரும் ஆடியோக்கள்-அதிர்ச்சி பின்னணி

பப்ஜி மதனுக்கு சிறையில் வசதி ஏற்படுத்தி கொடுப்பதற்காக லஞ்சம் கேட்ட புகாரில் புழல் சிறை உதவி ஜெயிலர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். சமூக வலைதளங்களில் ஆடியோ அந்த வைரலாகி வருகிறது. நடந்தது என்ன? தொகுப்பில் பார்க்கலாம்.

பப்ஜி விளையாட்டு மூலம் ஆபாசமாக பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதாக பப்ஜி மதனை கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். மதன் மீது ஆபாசமாக பேசுதல் உட்பட 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரது மனைவி கிருத்திகாவும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.

இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் பப்ஜி மதன்மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த குண்டர் சட்டத்தை அறிவுரை கழகமும் உறுதி செய்தது. குண்டர் சட்டத்தை எதிர்த்து பப்ஜி மதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கிறது. புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பப்ஜி மதனுக்கு கடந்த டிசம்பர் மாதம் சிறைக்குள் உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஸ்டேன்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதைத்தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சிறைக்குள் பப்ஜி மதனுக்கு வசதிகள் செய்து கொடுப்பது தொடர்பாக அவரது மனைவி கிருத்திகா சிறைக்குள் புழல் சிறையின் விசாரணை கைதிகளின் சிறை பொறுப்பாளர் உதவி ஜெயிலர் செல்வம் என்பவரிடம் பேசும் ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில், "நான் கிருத்திகா பேசுறேன். பணம் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. சேலத்தில் ரெடியாகி கொண்டிருக்கிறது. எனக்கு 2 நாட்கள் அவகாசம் வேண்டும்'' என்று கிருத்திகா பேசினார்.

அதற்கு செல்வம், இது தொடர்பாக மதன் தெரிவித்தார் என்று கூறினார். ரூ. 3 லட்சம் அதிகம் என்பதால் காலதாமதம் ஆகிறது. மதனை தனிமைப்படுத்தப்பட்ட அறையில் பார்த்து கொள்ளுங்கள். பணம் ரெடியான பிறகு போன் செய்வதாக கிருத்திகா பேசுகிறார். அதற்கு, பிரச்னை இல்லை. பணத்தை ரெடி பண்ணிவிட்டு சொல்லுங்கள் என்று உதவி ஜெயிலர் செல்வம் பேசிய ஆடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதைபோல மற்றொரு ஆடியோ ஒன்றும் வைராகி வருகிறது. அதில் உதவி ஜெயிலர் செல்வத்திடம் பெண் பத்திரிகையாளர் ஒருவர் பேசுகிறார். அதில், "ஆதாரம் இல்லை என நினைக்காதீர்கள். கிருத்திகாவின் வழக்கறிஞருக்கு போன் செய்தீர்களா? கிருத்திகாவிற்கு போன் செய்தீர்களா? லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பி விடவா? டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு அனுப்பி விட்டா என்னுடைய் வேலை முடிந்துபோய் விட்டது. யாரும் இங்கு தவறு செய்யாமல் இல்லை. நான் கிருத்திகாவுடன் பேசும் ஆடியோவை பெரிதாக நினைத்தால் செய்துவிடுவேன். எத்தனையோ விஷயத்தில் சிக்கி உள்ளீர்கள். ஆதாரம் இல்லாததால் தப்பி விட்டீர்கள். ஆனால் இதில் வசமாக சிக்கி விட்டீர்கள். ஆதாரம் வெளியே வந்தால் உங்கள் வாழ்க்கையே முடிந்து விடும்.

தேர்தல் நேரத்தில் பலர் வெறி கொண்டு இருக்கிறார்கள். நான் உங்கள் நலனுக்காக சொல்கிறேன். என்ன பண்ணுமோ பண்ணி விடுங்கள். பேசி முடித்து விடுங்கள். இல்லையென்றால் நாளை காலை செய்தி அடித்து எங்கே அனுப்பனுமோ அங்கு அனுப்புவேன். இந்த விஷயத்தை பெரிதாக்க வேண்டாம். நேராக சந்தியுங்கள். உங்களைப்பற்றி லஞ்ச ஒழிப்புத்துறையில் பேசப்படுகிறது. வாட்ஸ்அப் காலில் பேசும்போது எப்படி ரெக்கார்டு ஆகும். எனக்கும் மனசாட்சி இருக்கிறது. பிரச்னையை முடிக்கனும்னா ஆளை எங்கே அனுப்பனும் சொல்லுங்க" என்று அந்த பெண் ஒருவர் மிரட்டுகிறார்.

இதற்கு உதவி ஜெயிலர் செல்வம், "தனக்கு குடும்பம் இருக்கிறது. விடுமுறை எடுத்து வந்து சந்திக்க இயலாது. பிரச்சினையை முடித்து விடும்படி அவர் கெஞ்சுகிறார். இந்த 2 ஆடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது.

இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் துறைரீதியிலான விசாரணை நடத்த சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் உத்தரவிட்டார். சிறைத்துறை டிஐஜி தலைமையில் விசாரணை நடத்த குழு ஒன்றையும் அமைத்து உத்தரவிட்டார்.

புழல் சிறையில் விசாரணை கைதிகளை கொரோனா தனிமைப்படுத்தல் அறை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக புழல் சிறை உதவி ஜெயிலர் செல்வம் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் பப்ஜி மதன் ஸ்டேன்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் சிறைக்கு வந்த போது தனிமைபடுத்தப்பட்டார். அப்போது தான் வசதிகள் செய்து கொடுப்பதற்காக லஞ்சம் கேட்டதாக உதவி ஜெயிலர் செல்வம் மீது துறைரீதியிலான விசாரணை நடத்தப்பட்டது. மேலும் ரூ. 25 ஆயிரம் லஞ்சமாக கூகுள்பே மூலமாக பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

துறைரீதியிலான விசாரணை நடந்து வரக்கூடிய சூழ்நிலையிலும், லஞ்சம் வாங்கியது நிரூபணமாகியதால் உதவி ஜெயிலர் செல்வத்தை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் உத்தரவிட்டார்.

குறிப்பாக நீதிமன்றத்தில் சிறையில் அடைக்க உத்தரவு வந்தவுடன், கொரோனா பரிசோதனை செய்து சிறையில் 1 மாதம் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் வைத்து, அதன்பிறகு சாதாரண அறையில் அடைப்பது வழக்கம். தனிமைப்படுத்தும் அறையில் நல்ல கவனிப்பு கிடைப்பதாகக் கூறப்படுகிறது. பப்ஜி மதனுக்கு ஏற்கெனவே உடல்நிலை பிரச்னை ஏற்பட்டதால், தனிமைப்படுத்தல் அறையிலேயே மதனை கவனித்து கொள்ளும்படி அவரது மனைவி கிருத்திகா கேட்டபோது அந்த அறையின் இன்சார்ஜ் உதவி ஜெயிலர் செல்வம் 3 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கேட்டதாக புகாருக்குள்ளாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே சிறைகளில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக அதிகளவு புகார்கள் டிஜிபிக்கு வருவதால் திடீர் சோதனையானது மேற்கொள்ளப்பட்டு செல்போன், போதைப் பொருட்கள் பறிமுதல் செய்வது வழக்கமாக இருந்து வருகின்றன. ஏற்கெனவே முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மற்றும் கர்நாடகா சிறையில் சசிகலா சொகுசு வாழ்க்கை வாழ்வதாக எழுந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கைதிகளின் உறவினர் மற்றும் மனைவிகளிடம் சிறை பணியாளர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு சொகுசு வாழ்க்கைக்கு ஏற்பாடு செய்துதரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

- சுப்பிரமணியன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com