புதுக்கோட்டை: மகளுக்கு பாலியல் வன்கொடுமை; தந்தை போக்சோவில் கைது
கறம்பக்குடி அருகே மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பிணியாக்கிய தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சேகர். மனைவியை இழந்த இவர் தனது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் தனியாக இருந்த தனது மகளை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து 7 மாத கர்ப்பிணியான மகளை சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மருத்துவர்கள் இதுகுறித்து விசாரித்துள்ளனர்.
அப்போது தனது தந்தையே தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் கூறியுள்ளார். இதுகேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து அந்தப் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை சேகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.