புதுக்கோட்டை: போதை மாத்திரைகளை விற்றதாக 3 இளைஞர்கள் கைது
புதுக்கோட்டையில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை நகர் பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போதை மாத்திரைகள், மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்களையும் அதை பயன்படுத்துவோரையும் கண்டறிந்து கைது செய்ய எஸ்பி நிஷா உத்தரவிட்டதன் பேரில் நகரத்தில் உள்ள மூன்று காவல் நிலையங்களுக்கு உட்பட்ட போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது புதுக்கோட்டை அடப்பன்வயல் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக திருக்கோகர்ணம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த தனசேகர், சக்திவேல், ஹக்கீம் ஆகிய மூன்று இளைஞர்கள் போதை மாத்திரைகளை பயன்படுத்தி வந்ததோடு அதை விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த மூவரையும் கைது செய்த திருக்கோகர்ணம் போலீசார், அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.