புதுக்கோட்டை: பணம் கேட்டு தர மறுத்த தாய்மாமனை உலக்கையால் அடித்து கொலை செய்த இளைஞர்!

புதுக்கோட்டை: பணம் கேட்டு தர மறுத்த தாய்மாமனை உலக்கையால் அடித்து கொலை செய்த இளைஞர்!
புதுக்கோட்டை: பணம் கேட்டு தர மறுத்த தாய்மாமனை உலக்கையால் அடித்து கொலை செய்த இளைஞர்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பணம் கேட்டு தர மறுத்த தாய்மாமனை உலக்கையால் அடித்து கொலை செய்த 23 வயது இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை‌ மேற்கொண்டு வருகின்றனர்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கலபம் ஊராட்சியில் உள்ள ஆத்தியடிமனை கிராமத்தைச் சேர்ந்தவர் 65 வயதான வீரையா. இவர் அந்தப் பகுதியில் உள்ள தில்லை நாயகி அம்மன் கோயிலில் பூசாரியாக உள்ளார். இந்நிலையில் நேற்று மாலை வீரையா மற்றும் அவரது மனைவி சாந்தாயி ஆகிய இருவரும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அந்த வீட்டுக்கு வீரையாவின் தங்கை மங்களத்தின் மகனான 23 வயதான கனகராஜ் என்பவர் சென்றுள்ளார்.

பின்னர் அங்கு கனகராஜ் உணவு அருந்தி விட்டு அவரது தாய்மாமாவான வீரையாவிடம் பணம் கேட்டதாக கூறப்படுகின்றது. இதனை அடுத்து வீரைய்யா கனகராஜுக்கு பணம் கொடுக்க மறுத்ததாகவும் கனகராஜ் அங்கிருந்து விரக்தியில் சென்றதாகவும் கூறப்படுகிறது. பின்னர் வீரையாவின் மனைவி சாந்தாயி வீட்டில் உறங்கிய நிலையில் வீரையா எப்போதும் அவர் உறங்கும் இடமான கோயிலை ஒட்டி உள்ள கொட்டகையில் உறங்கிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது நேற்று நள்ளிரவில் அங்கு சென்ற கனகராஜ் தான் பணம் கேட்டும் கொடுக்க மறுப்பு தெரிவித்த அவர் தாய்மாமாவான வீரையாவை கோயில் உலக்கையை வைத்து தலையில் அடித்துள்ளார். பின்னர் வீரையா அதே இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதன் பின்னர் கனகராஜ் வீரையாவின் வீட்டிற்கு சென்று அவரது மனைவியிடம் வீரையா உயிரிழந்து கிடப்பதாக தெரிவித்துவிட்டு அங்கு உள்ள அடர்ந்த மரத்தில் அமர்ந்து நடப்பதை வேடிக்கை பார்த்து வந்துள்ளார்.

இதனையடுத்து வீரையாவின் மனைவி வீரையா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அலறியுள்ளார். அவர் அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்த பொதுமக்கள் அங்கு கூடிய நிலையில் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆலங்குடி காவல் துறையினர் வீரையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வீரையாவின் மனைவியிடம் விசாரித்த போது அவரது வீட்டிற்கு வீரையாவின் தங்கை மகனான கனகராஜ் தான் வந்தார் என்று தெரிவித்ததை தொடர்ந்து கனகராஜை காவல்துறையினர் கைது செய்து ஆலங்குடி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் வீரையா பணம் தர மறுத்ததால் தான் அவரை உலக்கையால் அடித்து கொலை செய்ததாக கனகராஜ் ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதன்பிறகு கனகராஜிடம் வாக்குமூலம் பெற்று கொலை வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். மேலும் கனகராஜ்-ன் தந்தை செல்வராஜ் கடந்த மூன்று மாத காலமாக கனகராஜ் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளதை தொடர்ந்து அது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பணம் கொடுக்கவில்லை என்பதற்காக தாய்மாமனை இளைஞர் ஒருவர் உலக்கையால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com