புதுச்சேரி: மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 இளைஞர்கள் போக்சோவில் கைது
புதுச்சேரியில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக நான்கு இளைஞர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி மனவெளியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (23). இவர், சுப காரியங்களுக்கு அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார், இந்நிலையில் இவரது நண்பர் ரியாஸ் என்பவர் மூலம் திருவாண்டார்கோயில் பகுதியை சேர்ந்த் 12ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நட்பாக பழக்குவதாக கூறி மாணவியுடன் பேசி வந்த ரஞ்சித் அவரிடம் நேரில் பேச வேண்டும் என கூறி திருக்கனூர் அழைத்து வந்து தன் நண்பர்களான தினேஷ், பிரசாத், திவ்யநாதன் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இதனை அடுத்து வீட்டுக்கு செல்லலாம் என்று கூறி திருக்கனூர் சரஸ்வதி நகரில் உள்ள திவ்யநாதன் வீட்டுக்கு மாணவியை அழைத்துச் சென்று, நான்கு பேரும் சேர்ந்து, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதில், அதிர்ச்சி அடைந்த மாணவி அங்கிருந்து தப்பித்து தன் தந்தையை அழைத்து அவருடன் திருக்கனூர் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்த புகாரை அடுத்து சார்பு ஆய்வாளர் குமார் மற்றும் போலீசார் அந்த நான்கு இளைஞர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தாங்கள் மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்டதாக ஒப்புக்கொண்டதை அடுத்து அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் நான்கு பேரையும் சிறையில் அடைத்தனர்.