விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தனியார் வங்கி ஊழியர் 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி விவேகனந்தர் காலனியை சேர்ந்தவர் பாலமுருகன். தனியார் வங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார். பாலமுருகன் வீட்டில் இருந்தபோது அவரை 8 பேர் கொண்ட கும்பல் இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளனர். பின்னர் நெடுநேரமாகியும் வீடு திரும்பாததால் பாலமுருகனின் பெற்றோர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனிடையே காட்டுப்பகுதியில் ரத்த வெள்ளத்தில் இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக அருகில் உள்ள பட்டாசு ஆலை தொழிலாளர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் உடலை மீட்டனர். பின்னர் அது பாலமுருகனின் உடல் என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதனையடுத்து
செங்கமலப்பட்டி காட்டுப்பகுதிக்குள் பாலமுருகனை 8 பேர் கொண்ட கும்பல் அழைத்து சென்று வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரியவந்துள்ளது. பாலமுருகனை அழைத்துச்சென்று கொலை செய்த நபர் குறித்தும், கொலைக்கான காரணம் குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.