ஜெயராஜூக்கும் பென்னிக்ஸ்க்கும் காயங்கள் இருந்தன - கைதி அதிரடி வாக்குமூலம்

ஜெயராஜூக்கும் பென்னிக்ஸ்க்கும் காயங்கள் இருந்தன - கைதி அதிரடி வாக்குமூலம்
ஜெயராஜூக்கும் பென்னிக்ஸ்க்கும் காயங்கள் இருந்தன - கைதி அதிரடி வாக்குமூலம்

கோவில்பட்டி கிளை சிறைக்கு ஜெயராஜூம் பென்னிக்ஸ்சும் வந்தபோது அவர்களது பின் புறத்தில் காயங்கள் இருந்ததாக சிறைக்கைதி ராஜாசிங் என்பவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சாத்தான் குளம் தந்தை மகன் கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்து வருகிறது. இது தொடர்பாக அடுத்தடுத்து போலீசார் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதனிடையே கடந்த 9 ஆம் தேதி கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உதவி ஆய்வாளர் பால்துரை மற்றும் தாமஸ் பிரான்சிஸ் ஆகிய இருவரும் உடல் நலம் குணமடைந்ததை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து பேரூரணி சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்நிலையில், கோவில்பட்டி கிளை சிறை கைதி ராஜாசிங் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தார். அப்போது “கோவில்பட்டி கிளை சிறைக்கு ஜெயராஜூம் பென்னிக்ஸ்சும் வந்தபோது அவர்களது பின் புறத்தில் காயங்கள் இருந்தன. எஸ்.ஐக்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மட்டுமல்லாது காவல்துறை நண்பர்களும் தங்களை தாக்கியதாக ஜெயராஜ் கூறினார். ஜெயராஜூக்கும் பென்னிக்ஸ்க்கும் காயம் ஏற்பட்ட பின்புறத்தை சுத்தப்படுத்தி சிறையில் மருந்திட்டனர். தன்னையும் எஸ்.ஐக்கள் ரகுகணேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் பின்புறத்தில் தாக்கினர்” எனத் தெரிவித்தார்.

சாத்தான்குளம் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டிருக்கும் நிலையில் மற்றொரு கைதி கூறியிருக்கும் வாக்குமூலம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. ராஜசிங் வாக்குமூலத்தின் அடிப்படையில் ராஜசிங்கை காவல்நிலையத்தில் வைத்து தாக்கியதற்காக எஸ்.ஐ.க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மீது ஆயுதங்களால் தாக்குதல், முறையற்ற கைது, கட்டாயப்படுத்தி வாக்குமூலம் வாங்குதல் என 8 பிரிவுகளின் கீழ் அதே சாத்தான்குளம் காவல்நிலையத்தில் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com