பாளையங்கோட்டை சிறையில் கைதிகளிடையே மோதல் : ஒருவர் உயிரிழப்பு
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே நடந்த பயங்கர மோதலில் விசாரணைக் கைதி ஒருவர் உயிரிழந்தார். பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே சிங்கிகுளம் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு மற்றும் அரிவாளுடன் சுற்றித்திரிந்த முத்து மனோ (27), சந்திரசேகர்(22) கண்ணன்(23) மாதவன் (19)ஆகிய 4 பேரிடம் இருந்து அரிவாள்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த களக்காடு போலீசார் அவர்களை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து இன்று 4 பேரும் ஸ்ரீவைகுண்டம் சிறைச்சாலையிலிருந்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்க கொண்டு வரப்பட்டனர். அப்போது சிறையிலிருந்து ஒரு பிரிவைச் சார்ந்த கைதிகள் அந்த நான்கு பேரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் முத்துமனோ தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று மதியம் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று மாலையில் அவர் உயிரிழந்தார்.
மேலும் இவருடன் தாக்குதலுக்கு உள்ளான சந்திரசேகர்(22) கண்ணன்(23) மாதவன் (19) ஆகியோர் மத்திய சிறை வளாகத்திலேயே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரு பிரிவினரிடையே சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.