ஆவடியில் முகமூடி அணிந்து செல்போன் கடையின் பூட்டை உடைத்து விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் நான்காயிரம் பணத்தை திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஆவடி காவல் ஆணையரகம் எல்லைக்குட்பட்ட திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை(44). இவர் அண்ணனுர் ரயில்வே நிலையம் அருகே ஸ்ரீ சக்தி நகரில் ஜோதி ஹோம் அப்ளையன்ஸஸ் மற்றும் செல்போன் கடை நடத்திவருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
பின்னர் மீண்டும் இன்று காலை கடையை திறக்க வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்திருக்கிறது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த செல்லதுரை உள்ளே சென்று பார்த்திருக்கிறார். அப்போது கடையில் இருந்த 2 லட்சம் மதிப்பிலான ஆண்ட்ராய்டு செல்போன்கள் 10 மற்றும் 4000 ரூபாய் பணம் திருடு போனது தெரியவந்தது.
இது குறித்து செல்லதுரை உடனடியாக திருமுல்லைவாயல் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குற்றப்பிரிவு ஆய்வாளர் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தார். அப்போது கையில் ராடுடன் ஜோக்கர் முகமூடி அணிந்து மர்ம நபர் ஒருவர் கேட்டை தாவி குதித்து உள்ளே வந்து செல்போன்களை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.