பழனியில் கேரளப்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமையா? நடந்தது என்ன? தீவிரமடையும் போலீஸ் விசாரணை

பழனியில் கேரளப்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமையா? நடந்தது என்ன? தீவிரமடையும் போலீஸ் விசாரணை
பழனியில் கேரளப்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமையா? நடந்தது என்ன? தீவிரமடையும் போலீஸ் விசாரணை

பழனியில் கேரளப் பெண் பலாத்காரம் செய்யப்பட்டதாக கேரள டிஜிபி, தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியன்பேரில் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

கேரள மாநிலம் கண்ணூர் அரசு மருத்துவமனையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை அளிக்கவந்த மருத்துவர்கள் அந்தப் பெண்ணை பரிசோதனை செய்துவிட்டு விசாரித்தபோது மூன்று நபர்கள் தன்னை பாலியியல் வன்கொடுமை செய்து விட்டதாக கூறியதால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தலைச்சேரி போலீஸாருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடந்த 19 ஆம் தேதி பழனிக்கு தானும் தனது கணவரும் சென்றதாகவும், அப்போது பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது தனது கணவர் அருகில் இருந்த கடைக்கு சென்றுவிட்ட நிலையில் மூன்று நபர்கள் தன்னை கடத்திச்சென்று அருகில் இருந்த தங்கும் விடுதியில் அடைத்து வைத்ததாக கூறியுள்ளார்.

பின்னர் தனது தன்னைத் தேடிவந்த கணவரை அந்த கும்பல் அடித்து விரட்டிவிட்டு இரவு முழுவதும் தங்கும் விடுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தங்கும் அறையில் இருந்து தப்பி வெளியே வந்து தனது கணவரை சந்தித்து நடந்ததை எடுத்துக் கூறியதாகவும், கணவருடன் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவும் சென்றபோது போலீசார் புகாரை வாங்கமல் அலட்சியப்படுத்தியதாகவும், வேறுவழியின்றி சொந்த ஊருக்கு திரும்பி வந்துவிட்டதாகவும், காமக்கொடூரர்கள் செய்த சித்திரவதையால் தனது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசாரிடம் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தலச்சேரி போலீஸார் முதல்கட்ட வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக கேரள டிஜிபி அணில்காந்த் தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், அதில் புகார் கொடுக்க வந்தவர்களை விசாரிக்காமல் திருப்பி அனுப்பிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில், பழனியில் கேரளா பெண் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான செய்திகள் வெளியானதை அடுத்து இந்த சம்பவத்தின் உண்மை நிலையை விளக்க வேண்டும் எனவும், குற்றம் நடந்திருந்தால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவளிபிரியா பழனிக்கு வந்து நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். குற்றம் நடந்ததாகக் கூறப்படும் அடிவாரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட போலீசார் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர், பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து, நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். அடுத்த கட்டமாக பழனி போலீசாரை கேரளாவிற்கு அனுப்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது கணவரிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் கேரள பெண் கற்பழிப்பு குறித்த சம்பவம் குறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ரவளிபிரியா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

கேரளப் பெண் பழனிக்கு வருகை தந்தபோது கற்பழிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், 365 மற்றும் 376D ஆகிய கடத்தல் மற்றும் கூட்டுக்கற்பழிப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், இந்த வழக்கு தொடர்பாக பெண் காவல்ஆய்வாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு முழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், சிசிடிவி காட்சிகள் தொலைபேசி உரையாடல்கள் மற்றும் சாட்சிகள் ஆகியவை குறித்து விசாரணை நடத்த மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தனது நேரடி கண்காணிப்பில் இந்த குழு செயல்படும் என்றும் தெரிவித்தார். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான விவகாரங்களில் தமிழக காவல்துறை துரிதமாக செயல்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் கேரளப் பெண் கற்பழிப்பு விவகாரம் தொடர்பாக பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் எதுவும் தெரிவிக்கப்பட்டு, காவல்துறையினர் அலட்சியமாக இருந்ததாக தெரியவந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்றும், இந்த வழக்கில் அறிவியல் பூர்வமாகவும், நேர்மையாகவும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இதுதொடர்பான வழக்கில் கேரள போலீசாருடன் இணைந்து முழுவிசாரணை செய்வோம் என்றும் தெரிவித்தார்.

மேலும் சம்பவம் நடந்ததாக கூறப்படும் நாளில் தர்மராஜ் என்பவர் மதுபோதையில் காவல் நிலையத்திற்கு சென்று கூறியதாகவும், மீண்டும் நல்ல நிலையில் இருக்கும்போது வந்து புகார் கொடுக்க காவல்துறையினர், சம்பந்தப்பட்ட விடுதி பகுதியில் சென்று பார்த்தபோது அது போன்ற எந்த சம்பவமும் நடைபெறவில்லை என தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் புகார் தெரிவித்த ஆணும் பெண்ணும் பல இடங்களில் சுற்றி திரிந்ததாக சாட்சிகள் விசாரணையில் தெரிய வந்ததாகவும், சில இடங்களில் சிசிடிவி பதிவுகள் பதிவாகியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கேரளப் பெண் பலாத்காரம் குறித்து பழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவதால் பழனியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com