‘செம்பை திறந்தால் எதையும் காணோம்’- சாமியார் வேடத்தில் வந்து பெண்ணிடம் நகைகள் பறிப்பு!

‘செம்பை திறந்தால் எதையும் காணோம்’- சாமியார் வேடத்தில் வந்து பெண்ணிடம் நகைகள் பறிப்பு!
‘செம்பை திறந்தால் எதையும் காணோம்’- சாமியார் வேடத்தில் வந்து பெண்ணிடம் நகைகள் பறிப்பு!
Published on

புதுச்சேரி கிராமப்பகுதியில் சூனியம் போக்குவதாக கூறி, சாமியார் வேடத்தில் பெண்ணிடம் நகைகளை கொள்ளையடித்தவர்களை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள கோர்க்காடு எல்லை அம்மன் நகரை சேர்ந்தவர் லட்சுமி (வயது 43). கணவரை இழந்த இவர், 2 மகன்களுடன் வசித்து வருகிறார். லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்த போது, சாமியார் போல் உடை அணிந்திருந்த 2 பேர் அங்கு வந்துள்ளனர். அவர்கள், லட்சுமிக்கு காலில் அடிபட்டதை கூறி, “உனக்கு யாரோ சூனியம் வைத்துள்ளனர். அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றால் வீட்டில் உள்ள தங்க நகைகளை மந்திரிக்க வேண்டும். அப்படி செய்தால், எல்லாம் சரியாகி விடும்” என்று கூறியுள்ளனர். இதை நம்பிய லட்சுமி, தனது கையில் அணிந்திருந்த 2 பவுன் வளையல்கள், காதில் அணிந்திருந்த தங்க தோடு ஆகியவற்றை அவர்களிடம் கழற்றி கொடுத்திருக்கிறார்.

அதன்பின் மூலிகை கலந்த தேங்காய் எண்ணெயை கொடுத்து ரூ.20 ஆயிரத்தை அவர்கள் கேட்டுள்ளனர். ஆனால் லட்சுமி தன்னிடம் ரூ. 8,500 மட்டுமே இருப்பதாக கூறி அந்த ஆசாமிகளிடம் கொடுத்துள்ளார். இதையெல்லாம் வாங்கிக் கொண்ட அந்த ஆசாமிகள், மந்திரம் சொல்வது போல் நடித்து ஒரு சொம்பை கொடுத்து, அதில் நகைகள் இருக்கின்றன என்றும், `நாளை அதை திறந்து நகைகளை எடுத்துக் கொள்’ என்றும் கூறி விட்டு அங்கிருந்து வேகமாக புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த மகன் விக்னேசிடம், நடந்த விவரம் குறித்து லட்சுமி தெரிவித்துள்ளார். உடனே அவர் செம்பை திறந்து பார்த்தபோது அதில் நகைகள் எதுவும் இல்லை. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து மங்கலம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், மோட்டார் சைக்கிளில் 2 பேர் காவி வேட்டி அணிந்து லட்சுமி வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து வில்லியனூர் பகுதியில் காவி வேட்டியுடன் நடமாடிய 8 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரித்ததில் ஒருவர் சிக்கியுள்ளார். அவரது கூட்டாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்ற்னர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com