தூத்துக்குடி: ஆண் நண்பர்களின் உதவியுடன் தாயை கொலை செய்த சிறுமி; போலீஸ் விசாரணை

தூத்துக்குடி: ஆண் நண்பர்களின் உதவியுடன் தாயை கொலை செய்த சிறுமி; போலீஸ் விசாரணை
தூத்துக்குடி: ஆண் நண்பர்களின் உதவியுடன் தாயை கொலை செய்த சிறுமி; போலீஸ் விசாரணை

தூத்துக்குடியில், 17 வயது சிறுமியொருவர் ஆண் நண்பர்களின் உதவியுடன் தனது தாயை கொலை செய்திருக்கிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட வண்ணார் இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் முனியலட்சுமி. இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவனைப் பிரிந்து கடந்த ஓராண்டாக, தனது மூன்று பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் முனியலட்சுமியின் 17 வயது மகள், தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே சில நண்பர்களுடன் தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த தாய் முனியலட்சுமி, மகள் அவர்களுடன் பழகுவதை கண்டித்துள்ளார். மகள், ஆண் நண்பர்களோடு பழகுவதை தாய் எதிர்த்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் முனியலட்சுமியை யாரோ சிலர் இன்று கொலை செய்துவிட்டதாக காவல்துறைக்கு அழைத்து மகள் கூறியிருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற தென்பாகம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டபோது, தாயை நண்பர்களுடன் சேர்ந்து மகளே கொலை செய்தார் என காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. குறிப்பாக சிறுமியை விசாரித்ததில் இன்று காலை வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனது தாய் முனியலட்சுமியை தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து தானே கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக அவர் கூறியிருக்கிறார்.

தாயை கொலை செய்த பின்னர், அதற்கு உதவியாக இருந்த இரண்டு ஆண் நண்பர்களையும் அங்கிருந்து அனுப்பி வைத்துவிட்டு, காவல்துறைக்கு போன் செய்து, தனது தாயை யாரோ கொலை செய்து விட்டனர் என தெரிவித்து உள்ளார் அச்சிறுமி. இவையாவும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் மட்டுமன்றி தூத்துக்குடி நகரப்பகுதியில் தொடர்ச்சியாக கொலை சம்பவம் அரங்கேறி வருவது அங்கிருப்போரை அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com