கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை

கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை

சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் இரு “ரூட் தல”களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி அருகே நேற்று காலை 11 மணியளவில் திடீரென சுமார் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒருவரையொருவர் கற்கள் மற்றும் கைகளால் சரமாரியாக தாக்கி கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த போலீசாரை கண்டதும் அனைத்து மாணவர்களும் சிதறி ஓடினர். அப்போது 4 மாணவர்களை போலீசார் துரத்தி சென்று பிடித்தனர்.

துரத்தி பிடிக்கும் போது மாணவர் ஒருவர் அருகே இருந்த டிரான்ஸ்பார்மரில் பையை மறைத்து விட்டு சென்றதை கவனித்த போலீசார் அந்த பையை திறந்து பார்த்தனர். அதில் 8 பட்டாக்கத்திகள் மற்றும் பல காலி மதுபாட்டில்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து அதை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் ரயிலில் வரும் திருத்தணி ரூட் மாணவர்கள் மற்றும் பூந்தமல்லி ரூட் மாணவர்கள் 40 பேர் தாக்கி கொண்டது தெரியவந்தது.

கத்தி சப்ளை செய்தது யார் எனவும் தப்பியோடிய மாணவர்கள் யார் எனவும் பிடிப்பட்ட மாணவர்கள் மற்றும் வீடியோவை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க உள்ளதாகவும், மேலும் கல்லூரி நிர்வாகம் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்ய உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற சம்பவங்களில் மீண்டும் மாணவர்கள் ஈடுபடாத படி கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த மோதலையடுத்து கல்லூரியின் அனைத்து நுழைவு வாயில்களிலும் மாணவர்களை காவல்துறை மற்றும் கல்லூரி நிர்வாகத்தால் சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் பூந்தமல்லி ரூட் தல பிரேம் குமார், திருத்தணி ரயில் "ரூட் தல கிஷோர் ஆகிய 2 கல்லூரி மாணவர்களையும் கீழ்ப்பாக்கம் போலீசார் கைது செய்தனர். மேலும் மோதல், பட்டா கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக 6 கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com