சென்னை: மது போதையில் அத்துமீறிய வாலிபர் அடித்துக்கொலை - ’தாதா’ பெண் உட்பட 4 பேர் கைது

சென்னை: மது போதையில் அத்துமீறிய வாலிபர் அடித்துக்கொலை - ’தாதா’ பெண் உட்பட 4 பேர் கைது
சென்னை: மது போதையில் அத்துமீறிய வாலிபர் அடித்துக்கொலை - ’தாதா’ பெண் உட்பட 4 பேர் கைது

சென்னையில் தவறாக நடந்து கொண்ட வாலிபரை கட்டையால் தாக்கி கொலைசெய்ய வைத்த பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை ராயப்பேட்டை காசிம் தெருவைச் சேர்ந்தவர் தாவித்ராஜா (20). இவர் கடந்த 14 ஆம் தேதி ராயப்பேட்டை ஓய்எம்சிஏ வாயில் அருகே உள்ள குப்பை தொட்டியோரம் மயங்கிய நிலையில் கிடந்தார். அப்போது அவ்வழியாக ஆட்டோவில் வந்த அவரது தாய் தேவி, மகன் தாவித் ராஜா குப்பை தொட்டியோரம் மயங்கி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

அங்கு ராஜாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து தாய் தேவி தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாகக்கூறி அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் தலையில் தாக்கப்பட்டதால் தாவித் ராஜா இறந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.



இதனையடுத்து சம்பவயிடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது கடந்த 13ஆம் தேதி இரவு ஒரு  ஆணும், பெண்ணும், ராஜாவை  இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து ஒய்எம்சி ஏ வாயில் அருகே உள்ள குப்பை தொட்டியோரம் படுக்கவைத்து விட்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து ராஜா வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்ற ரோஸி, ஜீவா, பார்த்திபன், ராயப்பேட்டையைச் சேர்ந்த ராஜேஷ் என்ற ராக்கி ஆகிய 4 பேரை கைதுசெய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ரோஸி கஞ்சா, போதை மாத்திரை வியாபாரியாக இருந்து வருவதும், ஜீவா, பார்த்திபன், ராஜேஷ் ஆகிய வாலிபர்களை வைத்து கஞ்சா, போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது.

"அக்கா கேங்க்" என்ற பெயர் வைத்துகொண்டு ரோஸி உடல் முழுவதும் டேட்டூ குத்திக்கொண்டு பெண் புள்ளிங்கோ போல வலம்வருவதை வாடிக்கையாக வைத்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த அக்கா கேங்கில் சமீபத்தில் தாவித் ராஜா சேர்ந்து ரோஸி மற்றும் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து கஞ்சா, போதை மாத்திரை சாப்பிட்டு சுற்றி வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதேபோல சம்பவ நாளன்று ராயப்பேட்டை சத்தியம் தியேட்டர் அருகே உள்ள பூங்காவில் தாவித் ராஜா உடன் ரோஸி, ஜீவா, ராஜேஷ், பார்த்திபன் ஆகிய 4 பேரும் போதை மாத்திரை சாப்பிட்டு மது அருந்தியுள்ளனர். அப்போது உச்சக்கட்ட போதையில் இருந்த தாவித் ராஜா ரோஸியிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனை விரும்பாத ரோஸி ராஜாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ரோஸி மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து தாவித்ராஜாவை கட்டையால் தலையில் அடித்து உதைத்தனர். இதில் ராஜா மயக்க நிலையில் விழுந்துள்ளார். பின்னர் போதையில் தாவித் ராஜா இருப்பதாக நினைத்து ரோஸி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ராஜாவை இருசக்கர வாகனத்தில் ஏற்றி வந்து ஒய்எம்சி அருகே உள்ள குப்பை தொட்டியோரம் போட்டு விட்டுச்சென்றது தெரியவந்தது. அதன் பின்னர் தான் தாவித் ராஜா இறந்திருப்பது தெரியவந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தலைமறைவாக இருந்த ரோஸியை போலீசார் பிடிக்க சென்றபோது, பிளேடால் கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் கொலை செய்த ரோஸி உட்பட 4 பேரை கைதுசெய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் கொலைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்ட ரோசி மீது கஞ்சா வழக்கும், ராஜேஷ் மீது கொலை முயற்சி மற்றும் கஞ்சா வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாம்: கர்ப்பிணி உள்ளிட்ட 4 பேர் மீது கம்பியால் தாக்குதல் - கன்னியாகுமரியில் பரபரப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com