தட்டார்மடம்: கொலைக்கு உடந்தையாக இருந்ததாக காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்குப்பதிவு
தூத்துக்குடி மாவட்டத்தில் நிலத்தகராறு காரணமாக, ஒருவர் கடத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தட்டார்மடம் காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த செல்வன் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான திருமணவேல் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர், செல்வனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் வெளியே வந்த சில நாட்களுக்குப் பிறகு செல்வன், சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவரை திருமணவேல் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து காரில் கடத்திச் சென்று தாக்கி உள்ளார்.
இதனையறிந்த காவல்துறையினர், திருமணவேலையும் கூட்டாளிகளையும் எச்சரித்ததை அடுத்து வனப்பகுதியில் செல்வனை இறக்கிவிட்டுச் சென்றுவிட்டனர். காயமடைந்த அவரை காவல் துறையினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், செல்வன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து கொலைக்கு உடந்தையாக இருந்ததாக தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் திருமணவேல் உள்ளிட்ட ஐந்து பேர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.