பாமக நகர செயலாளர் கொலை வழக்கு: குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்

பாமக நகர செயலாளரை கொலை செய்த குற்றவாளியை கைது செய்ய சென்றபோது, அக்குற்றவாளி காவல் துறையினரை தாக்க முயன்றுள்ளார். இதனால் அவரை காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனரென சொல்லப்படுகிறது.

செங்கல்பட்டு நகரில், மணிகூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்தவர் பாமக வடக்கு நகர செயலாளர் நாகராஜ். இவர் நேற்றிரவு மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செங்கல்பட்டு நகர காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக இச்சம்பவம் குறித்து விசாரிக்க தனிப்படைகள் அமைத்தார். அவர்கள் குற்றவாளியை கண்டறியும் தேடுதல் வேட்டையில் விரைந்து ஈடுபட்டனர். அப்போது, கொலை குற்றவாளிகள் பரனூர் வழியாக தப்பிச் சென்றதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

accused ajay
accused ajaypt desk

அப்போது புலிபாக்கம் பகுதியில் ரயில்வே பாதை அருகே சந்தேக நபர் செல்வதாக அறிந்த காவல்துறையினர் அந்த நபரை கைது செய்ய முயன்றர். அப்போது அந்த நபர் காவல் துறையினரை தாக்க முயற்சித்துள்ளார். இதையடுத்து செங்கல்பட்டு சின்னநத்தம் பகுதியைச் சேர்ந்த அஜய் என்ற அந்த நபரை காவல்துறையினர் துப்பாக்கியால் இடது கால் பகுதியில் சுட்டனர். இதனால் நிலை தடுமாறிய அஜய்யை கைது செய்து சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டிஎஸ்பி ஜூலியஸ் சீசர் தலைமையில் ஆய்வாளர்கள் வெற்றிச்செல்வன் சத்தியவாணி ஆகியோர் தலைமையில் 15க்கும் மேற்பட்ட காவலர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளி செங்கல்பட்டு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ajay
ajaypt desk

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற வடக்கு மண்டல காவல்துறை துணை தலைவர் பகலவன் மற்றும் செங்கல்பட்டு எஸ்பி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். போலீசாரை தாக்க முயன்ற குற்றவாளியை காவல்துறையினர் சுட்டுப் பிடித்த சம்பவம் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com