சென்னை: வலி நிவாரண மாத்திரைக்காக மெடிக்கல் ஷாப்பை உடைத்து கொள்ளை; காட்டிக்கொடுத்த டாட்டூ

சென்னை: வலி நிவாரண மாத்திரைக்காக மெடிக்கல் ஷாப்பை உடைத்து கொள்ளை; காட்டிக்கொடுத்த டாட்டூ
சென்னை: வலி நிவாரண மாத்திரைக்காக மெடிக்கல் ஷாப்பை உடைத்து கொள்ளை; காட்டிக்கொடுத்த டாட்டூ

சென்னையில் வலி நிவாரண மாத்திரைக்காக மெடிக்கல் ஷாப்பை உடைத்து பணத்தை கொள்ளையடித்த கொள்ளையர்களை டாட்டூ வைத்து அடையாளம் கண்டனர் போலீசார். கூவத்தில் குதித்து தப்பியபோது போலீசிடம் சிக்கினர்.

கடந்த 4-ம் தேதி அதிகாலையில் ஹெல்மெட் அணிந்துகொண்டு மெடிக்கல் ஷாப்பிற்குள் நுழைந்து ரூ. 1.50 லட்சத்தை கொள்ளையடித்த 2 கொள்ளையர்களை கீழ்ப்பாக்கம் காவல் ஆய்வாளர் சாம் வின்சென்ட் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். மேலும், சிசிடிவி காட்சியை வைத்து அடையாளம் காணும் முயற்சியில் கீழ்ப்பாக்கம் போலீசார் ஈடுபட்டனர்.

ஆனால் சிசிடிவி காட்சிகளில் தெளிவு இல்லாததால் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் அந்தக் காட்சிகளில் கொள்ளையன் ஒருவரின் வலது கையில் "டாட்டூ" போட்டிருந்தது தெரிந்தது. உடனே போலீசார் அந்த கொள்ளையரின் கை அடையாளத்தை பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களோடு ஒப்பிட்டு பார்த்தனர். அதில், பழைய குற்றவாளியான போண்டா ராஜேஷ் கையில் அந்த டாட்டூ இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து இந்த கொள்ளையர்கள் திருவல்லிக்கேணி பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்த போலீசார் அங்கு சென்று தேடினர். அங்கு பதுங்கியிருந்த கொள்ளையர்களான போண்டா ராஜேஷ், பிக்சோ விஜயகுமார் இருவரும் போலீசாரைக் கண்டதும் கூவம் ஆற்றில் குதித்து தப்பி ஓட முயற்சித்தனர். ஆனால் தனிப்படை போலீசாரும் ஆற்றில் குதித்து 2 கொள்ளையர்களையும் மடக்கி கைது செய்தனர்.

விசாரணையில் இவர்கள்மீது கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட விஜயகுமார் மற்றும் ராஜேஷ் இருவரிடமிருந்து ரூபாய் 55,000 ரொக்கம் மற்றும் 2 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விசாரணையில் வலி நிவாரண மாத்திரைகளை 2 கொள்ளையர்களும் போதை மாத்திரைகளாக உட்கொண்டு வந்ததும், அந்த மாத்திரைகளை வாங்குவதற்காகவே கடையை உடைத்து பணத்தை கொள்ளையடித்தாகவும் 2 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளதாக கீழ்ப்பாக்கம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைதான 2 பேரையும் கீழ்ப்பாக்கம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். "டாட்டூ" அடையாளத்தை வைத்து ஒரே நாளில் கொள்ளையர்களை கைது செய்த கீழ்ப்பாக்கம் போலீசாரை காவல்துறை உயர்அதிகாரிகள் பாராட்டி உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com