மணிகண்டனை கைதுசெய்து விசாரிக்க வேண்டியுள்ளது - காவல்துறை
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைதுசெய்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்து திருமணம் செய்வதாக வாக்குறுதி கொடுத்து ஏமாற்றியதாக அந்த நடிகை புகார் அளித்திருந்தார். நடிகையின் புகாரின்பேரில் அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 6 பிரிவுகளின்கீழ் அவர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
முன் ஜாமீன் கேட்டு மணிகண்டன் அளித்த புகார் மட்டும் விசாரணைக்கு வந்தபோது, நடிகை தரப்பில், மணிகண்டனுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது எனவும், அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டுவதால் அவரை காவல்துறையினர் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் நடிகை தாக்கல் செய்த மனு அப்போது பார்வைக்கு வராததால் வழக்கை 9ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், அதற்குள் புகாரளித்த நடிகையின் ஆட்சேபனை மனுவை பட்டியலிடவும் உத்தரவிடப்பட்டது. அதுவரை மணிகண்டனை கைதுசெய்யக்கூடாது என்ற இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
இதற்கிடையே இன்று மணிகண்டனின் முன்னாள் உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரியிடம் சென்னையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். ஒத்திவைக்கப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மணிகண்டனுக்கு எதிராக துணை நடிகை, மருத்துவர்களின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதால் அவரை கைதுசெய்து விசாரிக்கவேண்டிய அவசியம் உள்ளதாகவும், அவருடைய முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் எனவும் காவல்துறை நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது.
இந்நிலையில், விசாரணைக்கு ஒத்துழைக்க தயார்; இடைக்கால பாதுகாப்பாக முன்ஜாமீன் வேண்டும் எனவும், குற்றவாளி என்பதற்கு முகாந்திரம் இருந்தால் கைது செய்யட்டும் என மணிகண்டன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.