பழனி: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
பழனியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரப்பட்டி அருகே உள்ள கே.வேலூரில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வரும் அகமது ரபி (56) என்பவர், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அநாகரிமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த மாணவிகளின் பெற்றோர் வட்டார கல்வி அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். இதையடுத்து பாலியல் தொல்லை தொடர்பாக மாணவிகளின் பெற்றோர் தரப்பில் பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆசிரியர் அகமது ரபியை கைது செய்தனர்.