பழனி: மொபைலும் கையுமாக இருந்த தங்கையை கொலை செய்ததாக அண்ணன் கைது!
காதல் விவகாரத்தில் தொலைபேசியில் பேசிய தங்கையை அண்ணனே கொலை செய்த சம்பவம் பழனி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பழனி கணபதி நகரைச் சேர்ந்தவர் முருகேசன். கூலித் தொழிலாளியான இவருக்கு சங்கிலியம்மாள் என்ற மாற்றுத்திறனாளி மனைவியும், கார்த்தி என்ற மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். முருகேசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில், மகன் கார்த்தி கட்டட வேலைக்குச் சென்று அதில் வரும் வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று முருகேசனின் இளைய மகள் காயத்ரி (16) என்பவர் படுகாயங்களுடன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவர்கள் பரிசோதனையில் காயத்ரியின் குரல்வளை நெறிக்கப்பட்டு உடைந்திருப்பது தெரியவந்தது. மேலும் சிகிச்சை பலனின்றி சிறுமி காயத்ரி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த பழனி நகர காவல் துறையினர் நடத்திய விசாரணையில்,சிறுமி காயத்ரி கடந்த சில நாட்களாக தொலைபேசியில் ஒருவருடன் பேசி பழகி வந்ததாகவும், இதுகுறித்து பலமுறை எச்சரித்தும் கேட்காமல் இருந்தும் வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காயத்ரியின் பெரியம்மா மகன் பாலமுருகன் என்பவர் வீட்டிற்கு சென்றபோது காயத்ரி தனியாக இருந்தபடி தொலைபேசியில் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்து, பாலமுருகன் காயத்ரியை மிரட்டியுள்ளார்.
இதில், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆவேசமடைந்த பாலமுருகன் காயத்ரியை கடுமையாக தாக்கி அவரது குரல்வளையை நெறித்ததாக தெரிகிறது. இதில் மயக்கமடைந்த காயத்ரியை பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்த பாலமுருகன் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி காயத்ரி இறந்துள்ளார். இதையடுத்து பாலமுருகனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.