சிறுவனைக் கொன்று, சிறுவர்களே புதைத்தனர் ! போலீஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
15 வயது சிறுவனை கொன்று சுடுகாட்டில் புதைத்தாக 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் சூளைமேடு போலீசில் சரண் அடைந்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் நடந்த கொலை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சென்னை சூளைமேடு பகுதியில் பிளாட்பாரத்தில் வசித்து வருபவர் பெருமாள். பழைய புத்தகங்களை விற்பனை செய்து வருகிறார். இவருடைய மகன் ராஜேஷ் (15). கடந்த ஜனவரி 14-ம் தேதி அன்று விளையாடச் சென்ற ராஜேஷ் காணாமல் போனார். அவரது தந்தை பெருமாள் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் 21-ம் தேதி மகனை காணவில்லை என சூளைமேடு போலீசில் புகார் கொடுத்தார் பெருமாள். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டியிடம் 2 சிறுவர்கள் மற்றும் சூளைமேடு கிழக்கு நமச்சிவாயபுரத்தைச் சேர்ந்த பரத்குமார்(19) ஆகியோர் சரண் அடைந்தனர்.
அப்போது அவர்களிடம் நடத்திய விசாரணையில், காணாமல் போன ராஜேஷை தாங்கள் கொலை செய்து சுடுகாட்டில் புதைத்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் விசாரணை நடத்தப்பட்டதில், ஜனவரி 14-ம் தேதி நுங்கம்பாக்கம் சுடுகாட்டில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கத்தியுடன் வந்த (கொலை செய்யப்பட்டவர்) ராஜேஷ் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை மிரட்டி பணம் கேட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 3 சிறுவர்கள், பரத்குமார் ஆகியோர் சேர்ந்து ராஜேஷை பிடித்து கீழே தள்ளி அடித்து உதைத்து முகத்தில் மிதித்து கொலை செய்துள்ளனர்.
பிறகு போலீசில் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதற்காக பரத்குமார் 3 சிறுவர்களுடன் சேர்ந்து ராஜேஷை அதே சுடுகாட்டில் புதைத்து விட்டு அவரவர் வீட்டிற்கு சென்று விட்டனர் என்று சரண் அடைந்த பரத்குமார், 2 சிறுவர்கள் வாக்குமூலமாக அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்ததுள்ளனர். இந்த கொலை சம்பவத்தில் மேலும் ஒரு சிறுவன் தலைமறைவாகி உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலையில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சிறுவன் ராஜேஷின் உடலை தாசில்தார் முன்னிலையில் சூளைமேடு போலீசார் தோண்டி எடுக்க உள்ளனர்.