’மது போதையில் கோயிலில் தூங்காதே’ என்ற மூதாட்டி அடித்துக் கொலை... போதை ஆசாமி கைது...
மது போதையில் கோயிலில் தூங்காதே எனக்கூறிய மூதாட்டி அடித்துக் கொலை. போதை ஆசாமி கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த கல்லக்குடி அருகே கோவண்டாகுறிச்சி ஊராட்சியில் உள்ள மேலத்தெருவில் வசிப்பவர் 75 வயதான பழனியம்மாள். இவரது கணவர் இளம் வயதிலேயே உயிரிழந்த நிலையில், இவரது ஒரே மகளை பழனியம்மாள் திருமணம் முடித்து வைத்து இவர் மட்டும் அவரது வீட்டில் தனிமையில் வசித்து வந்தார்.
பழனியம்மாள் வீட்டின் அருகிலுள்ள மாரியம்மன் கோயிலை தூய்மைப்படுத்தி, வாசலில் கோலம் போடுவது போன்ற இறை பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் மாரியம்மன் கோயில் முன்பு அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மதுபோதையில் வந்து தூங்கியுள்ளனர் இதற்கு மூதாட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த 57 வயதான அந்தோணிசாமி, மூதாட்டியை கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார்.
இது தொடர்பாக கோவண்டாகுறிச்சி கிராம நிர்வாக அலுவலர் கல்லக்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாhரின் பேரில் போலீசார் அந்தோணிசாமியை கைதுசெய்து விசாரணை செய்தனர். அப்போது தனக்கு நீண்ட காலமாக மதுகுடிக்கும் பழக்கம் இருப்பதால், என்னை விட்டு மனைவி மற்றும் குழந்தைகள் பிரிந்து சென்றுவிட்டனர். அதனால் மாரியம்மன் கோயிலின் முன்புறம் தூங்கிய என்னை மூதாட்டி திட்டியதால் ஆத்திரமடைந்து, மதுபோதையில் கட்டையால் அடித்துக் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டதால் அவர் மீது கல்லக்குடி போலீசார் கொலை வழக்கு பதிவுசெய்து கைது செய்தனர்.