கொலை செய்ய திட்டமா? சென்னையில் அரிவாளுடன் சுற்றிய நெல்லை ரவுடிகள்

கொலை செய்ய திட்டமா? சென்னையில் அரிவாளுடன் சுற்றிய நெல்லை ரவுடிகள்

கொலை செய்ய திட்டமா? சென்னையில் அரிவாளுடன் சுற்றிய நெல்லை ரவுடிகள்
Published on

சென்னையில் அரிவாள்களுடன் காரில் சுற்றி வந்த கார் ஓட்டுநர் உள்பட 2 பேரை  நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மருது தலைமையிலான போலீசார் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். நுங்கம்பாக்கம் மேயர் சிவசண்முகம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். காரை போலீசார் மடக்குவதை தெரிந்து 3 பேர் தப்பி ஓடி விட்டனர்.

உடனே போலீசார் கார் ஓட்டுநரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் செல்வமணி என்பது தெரிந்தது. காரை சோதனை செய்தபோது 2 அரிவாள்கள் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். செல்வமணி மீது தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று உள்ளது.

கார் ஓட்டுநர் செல்வமணியிடம் நடத்திய விசாரணையில், தப்பி ஓடியது நெல்லை மாவட்டம் மறுகால்குறிச்சியை சேர்ந்த கணேசன், நெல்லை குலவணிகர்புரத்தைச் சேர்ந்த உதய பாண்டி, நெல்லை மகிழ்ச்சி நகரைச் சேர்ந்த பரமசிவம், நெல்லை மாவட்டம் மறுகால்குறிச்சியைச் சேர்ந்த முருகன், ராயபுரத்தைச் சேர்ந்த விஜய் சந்திரசேகர், நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஏ.எம்.கணேசன், ரஞ்சித் ஆகியோர் என்பது தெரிய வந்தது.

இதில் தப்பி ஓடிய நெல்லை கணேசன் மீது நாங்குநேரி காவல் நிலையத்தில் இரட்டை கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கும் உள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் கணேசன் தங்கியிருந்த நுங்கம்பாக்கத்தில் உள்ள லாட்ஜிற்கு போலீசார் சென்று சோதனை நடத்தினர். நுங்கம்பாக்கத்தில் உள்ள லாட்ஜில்  தங்க வேண்டும் என்றும் இந்த அறையை வழக்கறிஞர் விஜய் சந்திரசேகர் என்பவரும், நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த கணேசனும் தயார் செய்து கொடுத்ததாக கைதான கார் ஓட்டுநர் செல்வமணி போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற உத்தரவு நாளை தெரிவிப்பதாக கூறியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தப்பி ஓடிய நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ஏ.எம்.கணேசனை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரிடமிருந்து 2 அரிவாள்கள், கார், பைக், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், கஞ்சா பொட்டலங்களும், ஆயிரக்கணக்கில் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  அதனை விசாரணைக்கு பிறகு தெரிவிப்பதாக நுங்கம்பாக்கம் போலீசார் தெரிவித்துள்ளனர். தப்பி ஓடிய நெல்லை மாவட்ட ரவுடிகள் சென்னையில் யாரேனும் கொலை செய்வதற்கு வந்துள்ளார்களா என்ற கோணத்தில் நுங்கம்பாக்கம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: ஆரணி: மாணவர்களுக்கு பாலியல் தொல்லை – விடுதி துணை காப்பாளரின் மோசமான செயல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com