ஜாமீன் பெற்று தலைமறைவான பிரபல ரவுடி பினு கைது ! - என்னக் காரணம்?

ஜாமீன் பெற்று தலைமறைவான பிரபல ரவுடி பினு கைது ! - என்னக் காரணம்?
ஜாமீன் பெற்று தலைமறைவான பிரபல ரவுடி பினு கைது ! - என்னக் காரணம்?

ஜாமீன் பெற்று தலைமறைவாக இருந்து வந்த பிரபல ரவுடி பினு அதி தீவிர குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கொளத்தூர் லக்‌ஷ்மிபுரம் பகுதியைச் சேர்ந்த 55 வயதாகும் பினு, A+ சரித்திர பதிவேடு குற்றவாளியான, இவர் மீது 4 கொலை வழக்கு, கொலை முயற்சி, கொள்ளை, ஆயுத தடைச் சட்டம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ரவுடி பினு கடந்த 2018ம் ஆண்டு மாங்காடு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ரவுடிகளை ஒரே இடத்தில் கூட்டி அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து 2018ம் ஆண்டு, 2019 ம் ஆண்டு என இரு முறை போலீசாரால் கைது செய்யப்பட்ட ரவுடி பினு, நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தபின், காவல் நிலையத்தில் கையெழுத்திடாமல் 2 ஆண்டுகளுக்கும் மேல் தலைமறைவானார்.

அதன் பின்னர் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் சூளைமேடு பகுதியில் மாமூல் வசூலில் ரவுடி பினு ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சூளைமேடு தனிப்படை போலீசார் அவரை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர். அப்போதும் நிபந்தனை ஜாமினில் வெளியேறி தலைமறைவாக இருந்து வந்த ரவுடி பினு, சூளைமேடு பகுதியில் வைத்து ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த செல்போனை கொண்டு வந்து கொடுத்த டெலிவரி பாயிடம், மிரட்டி செல்போனை பறித்து தாக்கிவிட்டு துரத்தி அடித்ததாக புகார் அளிக்கப்பட்டது.

அப்புகார் தொடர்பான வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ரவுடி பினு சரணடைந்த நிலையில், அவரை போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது தான் இதய நோய் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வருவதால் தன்னை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்குமாறு கோரிக்கை வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ரவுடி பினு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மீண்டும் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். பின்னர் வழக்கு தொடர்பாக சூளைமேடு காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடாமல் ஜாமீன் நிபந்தனையை மீறி ரவுடி பினு தொடர்ந்து தலைமறைவானார்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த பிரபல ரவுடி பினு இன்று அதி தீவிர குற்றத் தடுப்புப் பிரிவு போலீசாரால் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்ட ரவுடி பினுவை அதி தீவிர தடுப்புப் பிரிவு போலீசார் சூளைமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அடுத்தகட்டமாக ரவுடி பினு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com