திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு நேற்று இரவு இலங்கை தலைமன்னாரில் இருந்து கடல் வழியாக நாட்டுப்படகில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக கடற்கரைக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்த மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினர், ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் துப்பாக்கியுடன் மறைந்திருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே வந்து நின்ற நாட்டு படகில் இருந்து மர்ம நபர் ஒருவர் தங்கக் கட்டிகள் கொண்ட பார்சலை கரையில் நின்று கொண்டிருந்த நபரிடம் கொடுத்து விட்டு மீண்டும் படகில் புறப்பட்டுச் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து கடத்தல் தங்கக் கட்டிகளை பெற்றுக் கொண்ட நபர் இருசக்கர வாகனத்தில் அதை எடுத்துக்கொண்டு ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடம் தர்கா ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் வருவதை அறிந்த அந்த நபர், இருசக்கர வாகனத்தை அவ்வழியாக சென்ற ஆட்டோவில் மோதி விட்டு தப்பிசெல்ல முயன்றுள்ளார். இதனை கண்ட அதிகாரிகள் அவரை மடக்கி பிடிக்க முயன்ற போது அதிகாரியை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து அவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது அதில், தங்கக் கட்டிகள் இருந்தது. தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்து அதிகாரிகள் ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து வந்து எடை போட்டு பார்த்ததில் அதில் சுமார் 7.70 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கடத்தல் தங்கத்தை விட்டுச் சென்ற நபர் தங்கச்சிமடத்தை சேர்ந்த ஐசக் என்பது தெரியவந்துள்ளதாகவும் அவரை தீவிரமாக தேடி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 4.50 கோடி ரூபாய் என்றும், கடத்தல் தங்கம் யாருக்காக கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பறிமுதல் செய்த தங்கத்தை திருச்சியில் உள்ள மத்திய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு தலைமை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.