போதைப்பொருள் வழக்கு: ஆர்யன் கான் வழக்கில் திருப்பம்

போதைப்பொருள் வழக்கு: ஆர்யன் கான் வழக்கில் திருப்பம்
போதைப்பொருள் வழக்கு: ஆர்யன் கான் வழக்கில் திருப்பம்

ஆர்யன் கான் வழக்கில் சர்ச்சை அதிகாரி சமீர் வான்கடே நீக்கப்பட்டதாக வெளியான தகவலை மறுத்துள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்துள்ளது.

போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கடந்த மாதம் 2ஆம் தேதி மும்பை - கோவா சொகுசு கப்பலில் சோதனை நடத்தினர். அப்போது போதை விருந்தில் பங்கேற்றதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். ஆர்யன் கானை கைதுசெய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மும்பை மண்டல இயக்குநர் சமீர் வான்கடே மீது மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார். மேலும் ஆர்யன் கானை விடுவிக்க 25 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும், அதில் சமீர் வான்கடேவுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், விசாரணையில் இருந்து சமீர் வான்கடே நீக்கப்பட்டதாக நேற்று தகவல்கள் வெளியாகின.

இதனை மறுத்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தலைமை அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஆர்யன் கான் சம்பந்தப்பட்ட போதைப்பொருள் வழக்கை இனி மும்பை அதிகாரி சமீர் வான்கடே கண்காணிக்க மாட்டார் என்றும், இவ்வழக்கில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தாக்கங்கள் இருப்பதால் டெல்லியில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எந்த அதிகாரியும் அல்லது அதிகாரிகளும் அவர்களின் தற்போதைய பணிகளில் இருந்து நீக்கப்படவில்லை என்றும், ஏதேனும் குறிப்பிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் வரை அவர்கள் தொடர்ந்து சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு உதவுவார்கள் என்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரித்து வந்த ஆர்யன் கான் வழக்கு மற்றும் மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக்கின் மருமகன் அர்மான் கோலி தொடர்புடைய வழக்கு உள்பட 6 வழக்குகளும் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com