குடிக்கு அடிமையான மகனை ஆள் வைத்து கொலை செய்த தாய் - திருச்சியில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்

குடிக்கு அடிமையான மகனை ஆள் வைத்து கொலை செய்த தாய் - திருச்சியில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்
குடிக்கு அடிமையான மகனை ஆள் வைத்து கொலை செய்த தாய் - திருச்சியில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்

திருச்சியில் லாரி உரிமையாளரொருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தாய் மற்றும் முன்னாள் அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரி என்பவரின் தம்பி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே காந்திநகர் பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம்-அம்சவள்ளி தம்பதிக்கு அமிர்தராஜ், சதீஷ்குமார் என இரு மகன்கள் உள்ளனர். இதில் சதீஷ்குமார் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி லோகேஸ்வரி என்ற மனைவியும், இரண்டரை வயதில் பிரபஞ்சனா என்ற மகளும் உள்ளனர். சதீஸ்குமார் தற்சமயம் மண்ணச்சநல்லூர் காந்திநகரில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் சதீஸ்குமார் குடிக்கு அடிமையாகி இருந்திருக்கிறார். இதனால் அவருக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதில் சமீபத்தில் கணவருடன் சண்டையிட்ட லோகேஷ்வரி, அவரது தாய் வீடான தொட்டியம் கிராமத்திற்கு சென்றுள்ளார்.

இதற்கிடையே சொத்தில் பங்கு கேட்டு தாயிடம் சதீஸ்குமார் பிரச்னை செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன் கன்னியாக்குடியில் உள்ள தங்கள் நிலத்தை ரூ.1.25 கோடிக்கு விற்றுள்ளார் அவர். அதை தனது 2 மகன்களுக்கும் தலா ரூ.40 லட்சம் பணம் கொடுத்துள்ளனர். இதில் மதுவுக்கு அடிமையான சதீஸ்குமார் பணத்தை எல்லாம் செலவழித்து விட்டு, தன் தாயிடமிருந்த மீதி பணத்தை கேட்டு அடிக்கடி தொந்தவு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் அவரது தொந்தரவை தாங்கிக் கொள்ள முடியாத தாய் அம்சவள்ளி, சதீஸ்குமாரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக சதீஸ்குமாரின் நண்பரான மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த புல்லட் ராஜாவை அவர் அனுகியுள்ளார். அவர் மூலம், தன் மகனை கொலை செய்ய சொல்லி அதற்கு ஈடாக ரூ. 5 லட்சம் பேரம் பேசி ரூ. 20 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்துள்ளார். இந்த புல்லட் ராஜா, மண்ணச்சநல்லூர் முன்னாள் அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரி தம்பி ஆவார்.

அம்சவள்ளியின் திட்டத்தின்படி புல்லட் ராஜா மற்றும் சிலர் இணைந்து, கடந்த 7-ம் தேதி வடக்கு ஈச்சம்பட்டியில் உள்ள வரட்டு ஏரியில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் சதீஷ்குமாரை அடித்து கொலை செய்துள்ளனர். சதீஸ்குமார் கொலை செய்யப்பட்ட விவகாரம், 9ம் தேதியே வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த 7 ம் தேதி வடக்கு ஈச்சம்பட்டியில் உள்ள வறட்டு ஏரியில் அனைவரும் மது அருந்தியுள்ளனர். மது போதையின் உச்சத்தில் இருந்த சதீஸ்குமாரை ஏரியில் இருந்த தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்து, கொலை பற்றி தெரியாமல் இருக்க கம்பியால் கை, கால்கள் கட்டப்பட்டு உடலில் கல்லை கட்டி 10 அடி ஆழ தண்ணீரில் வீசியிருந்துள்ளார். இந்நிலையில் கடந்த கடந்த 9 ம் தேதி வடக்கு ஈச்சம்பட்டியில் உள்ள வறட்டு ஏரியில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ சென்ற மண்ணச்சநல்லூர் போலீசார் உடலை மீட்டு விசாரணை செய்ததில் காணாமல் போன சதீஷ்குமார் என தெரியவந்தது.

விசாரணையை போலீசார் தொடங்கியபோது சந்தேகத்தின் அடிப்படையில் சதீஸ்குமாருடன் மது அருந்த சென்ற நண்பர்களை பிடித்து காவல்துறையினர் கேள்விகேட்டுள்ளனர். அப்போதுதான் இந்த 6 பேர் கொண்ட கும்பலின் சதி தெரியவந்துள்ளது. இந்த கொலை வழக்கில் மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த நலராஜா என்கின்ற புல்லட் ராஜா (வயது 41), கொத்தனார் ராஜா (வயது 31), சுரேஷ் பாண்டி என்கின்ற சுரேஷ், ஷேக் அப்துல்லா (வயது 45), அரவிந்த்சாமி (வயது 19), தாய் அம்சவள்ளி (வயது 59) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் தலைமறைவாக உள்ள பிச்சைமுத்துவை போலீசார் தேடி வருகின்றனர். 

கைது செய்யப்பட்ட அனைவரையும் திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com