சென்னையில் பெண் காவலரிடம் அத்துமீறல் - 2 பேர் கைது

சென்னையில் பெண் காவலரிடம் அத்துமீறல் - 2 பேர் கைது
சென்னையில் பெண் காவலரிடம் அத்துமீறல் - 2 பேர் கைது

சென்னையில் பெண் காவலரிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகக்கூறி 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட கேளம்பாக்கம் காவல் சரக உதவி ஆணையராக இருந்து வருபவர் ரவிக்குமார். இவரது தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டு தரமணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது தாயாரை பார்த்து கொள்வதற்காக உதவி ஆணையர் ரவிக்குமார் சுழற்சி முறையில் காவலரை பணி அமர்த்தியுள்ளார்.

அந்த வகையில், ரவிக்குமாரின் தாயாரை பார்த்துக் கொள்ள கானாத்தூர் காவல் நிலைய பெண் காவலர் ஒருவர் நேற்று அனுப்பப்பட்டார். பணி முடிந்த பின்னர், வேறு காவலரை மாற்றி விடுவதற்காக மருத்துவமனைக்கு வெளியே பெண் காவலர் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், பெண் காவலரை பார்த்து ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால்  பெண் காவலர் மருத்துவமனைக்குள் சென்றுவிட்டார்.

இதையடுத்து, மீண்டும் கீழே வந்த பெண் காவலரிடம் அதே நபர் ஆபாசமாக பேசி உள்ளார். இதனால் கோபமடைந்த பெண் காவலர் அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து, தனது நண்பரை வரவழைத்த அந்த நபர், அங்கிருந்த காவலர்களிடம் பிரச்னையில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பெண் காவலர் கொடுத்த புகாரின் பேரில் அந்த நபரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் தரமணியை சேர்ந்த விக்னேஷ் (29) என்பது தெரியவந்தது. அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது நண்பர் ஒருவரையும் கோட்டூர்புரம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதனிடையே, தனது தாயாரை மருத்துவமனையில் பார்த்து கொள்வதற்காக காவலர்களை பணியமர்த்திய உதவி ஆணையர் ரவிக்குமார் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com