அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே முழு ஊரடங்கில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒகருவர்ஸ கைது செய்யப்பட்டார்.
அம்பத்தூர் தொழிற்பேட்டை, சி.டி.எச் சாலை, போலீஸ் பூத் அருகில் சப்- இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் ஊர்காவல் படையினர் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வாலிபர் ஒருவர் வேகமாக வந்து கொண்டிருந்தார்
இதனையடுத்து, போலீசார் அவரை வழிமறித்து சோதனை செய்ய முற்பட்டனர். அப்போது அந்த வாலிபர் பைக்கை நிறுத்தாமல் வேகமாக வந்து சப்- இன்ஸ்பெக்டர் ரவி மீது மோதினார். இதில், அவர் தூக்கி வீசப்பட்டு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
அப்போது, அவருடன் இருந்த ஊர்க்காவல் படையினர் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர், அவரை அருகில் உள்ள போலீஸ் பூத்தில் வைத்து பூட்டினர். பின்னர், ஊர்க்காவல் படையினர் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். மேலும், போலீஸ் அதிகாரிகள் வருவதற்குள் அந்த வாலிபர் பூத்தில் இருந்து தப்ப முயன்றார்.
அப்போது அங்கிருந்த கண்ணாடிகளை உடைத்து அடித்து நொறுக்கி உள்ளார். இதனால், அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் போலீஸ் உதவி கமிஷனர் கனகராஜ் தலைமையில் போலீசார், வாலிபரை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் வில்லிவாக்கம், பாரதி நகர், முதல் தெருவை சேர்ந்த ரவுடி கணேசன் என்று தெரியவந்தது. இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்துள்ளனர்.