மதுரை | நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது – 31 வெடிகுண்டுகள் பறிமுதல்
செய்தியாளர்: மணிகண்டபிரபு
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அதலை கிராமத்தில் ஜோயல் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் அழுகிய நிலையில் நாய் மற்றும் பன்றி ஒன்று கிடப்பதைப் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த மதுரை மாட்டுத்தாவணி வனசரக வனத்துறையினர் ஜோயல் என்பவரது தோட்டத்திற்கு வந்து சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்தின் பெயரில் சுற்றித்திரிந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையின் போது, திண்டுக்கல் நத்தம் அருகே லிங்கவாடி பகுதியைச் சேர்ந்த மணி (70) மற்றும் ராமையா (43) இவர்களிடமிருந்து பன்றிக்காக வைத்திருந்த 31 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றி சமயநல்லூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதைத் தொடர்ந்து சமயநல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.