மதுரை: திருமணத்தை மீறிய உறவுக்கு தடையாக இருந்த தாய், மகள் படுகொலை
மேலூர் அருகே தாய் மகள் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருந்ததால் தாயையும், சகோதரியையும் கொலை செய்ய தூண்டிய மூத்த மகளை பிடித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள கீழ பதினெட்டாங்குடியைச் சேர்ந்த நீலாதேவி (47) மற்றும் அவரது மகள் அகிலாண்டேஸ்வரி (22) ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் அவர்களது வீட்டிலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
தகவல் அறிந்த மேலூர் டி.எஸ்.பி ரகுபதி தலைமையிலான போலீசார், உடலை கைப்பற்றி மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் துறையினர் உதவியுடன் தடயங்களை சேகரித்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரை மாவட்ட எஸ்பி சுஜித்குமார், கொலைக்கான காரணம் குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டார்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் நீலாதேவியின் மூத்த மகள் மகேஸ்வரிக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. அதை தாயும் சகோதரியும் கண்டித்ததால் ஆத்திரத்தில் ஆண் நண்பரோடு சேர்ந்து கொடூரமாக தாயையும், சகோதரியையும் படுகொலை செய்ததது தெரியவந்தது. இதையடுத்து நீலாதேவியின் மூத்த மகள் மகேஸ்வரியை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் தலைமறைவான மகேஸ்வரியின் ஆண் நண்பர் சசிகுமாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கொலையான தாய் மற்றும் மகளின் உடல் பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருந்த தாய் மற்றும் சகோதரியை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.