‘பிரசவித்த எனது மகளின் உடலை தோண்டி எடுங்கள்’- நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

‘பிரசவித்த எனது மகளின் உடலை தோண்டி எடுங்கள்’- நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
‘பிரசவித்த எனது மகளின் உடலை தோண்டி எடுங்கள்’- நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

பிரசவமான தனது மகள், பயிற்சி மருத்துவர் செலுத்திய ஊசியின் காரணமாகவே, உயிரிழந்ததாகவும், உடலை தோண்டி எடுத்து உடற்கூராய்வு செய்ய உத்தரவிடக்கோரிய வழக்கின் விசாரனை நீதிபதி அமர்வுக்கு வந்த நிலையில் வழக்கு ஒத்தி வைக்க்கப்பட்டுள்ளது.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தரப்பில், உயிரிழந்த கனிமொழியின் மருத்துவ அறிக்கை மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. தேனி கண்டமனூரைச் சேர்ந்த பூங்கொடி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது மகள் கனிமொழிக்கு கடந்த 2012ல் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர் மீண்டும் கருவுற்ற நிலையில் தேனி, ராஜதானி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முறையாக பரிசோதனைகளை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் 8-ம் தேதி மகளை பிரசவத்திற்காக ராஜதானி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்த நிலையில், அவர்கள் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அறுவை சிகிச்சை மூலமாக ஆண் குழந்தை பிறந்த நிலையில் அன்றே குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. 15ஆம் தேதி தையல் பிரிக்கப்பட்டு, தாயும் சேயும் நலமாக இருந்தனர்.

இந்நிலையில் ஜூன் 16ஆம் தேதி பயிற்சி மருத்துவர் எவ்வித பரிசோதனையும் செய்யாமல் எனது மகளுக்கு ஊசி ஒன்றை போட்டார். அதைத்தொடர்ந்து எனது மகளுக்கு கடுமையான வலி ஏற்பட்ட நிலையில், என்னிடம் கையெழுத்து மட்டும் பெற்றுக் கொண்டு எனது மகளை செப்டிக் சிகிச்சை அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த நோயாளிகளை வெளியே அனுப்பிவிட்டு எனது மகளுக்கு சிகிச்சைகளை அளித்தனர். அப்போது எனது மகளுக்கு ஊசி செலுத்திய பயிற்சி மருத்துவரை, மூத்த மருத்துவர் கண்டித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் ஜூன் 21ஆம் தேதி எனது மகள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் எனது மகளின் மரணத்திற்கான காரணத்தை மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிடாததோடு, எந்த பிரச்சனையும் செய்யாமல் மகளின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு மிரட்டினர். காவல்துறையினரும் உடலை பெற்றுக் கொள்ளுமாறு எங்களை வற்புறுத்தினர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யுமாறும், எனது மகளின் உடலை உடற்கூராய்வு செய்யுமாறும், பலமுறை கோரிக்கை விடுத்தும் அதை யாரும் ஏற்கவில்லை.

மேலும் காவல்துறையினரும் மிரட்டியதால் எனது மகளின் உடலை பெற்றுக்கொண்டு சத்திரப்பட்டி கிராம மயானத்தில் உடலை அடக்கம் செய்தோம். தொடர்ந்து எனது மகளின் மருத்துவ அறிக்கைகளையும் மருத்துவர்கள் வழங்கவில்லை. பயிற்சி மருத்துவர் தவறான மருந்துகளை செலுத்தியதே எனது மகளின் இறப்பிற்கு காரணம்.

இது தொடர்பான நடவடிக்கைக்கோரி அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே சித்தாரப்பட்டி மயானத்தில் புதைக்கப்பட்ட தனது மகளின் உடலை 2 மூத்த தடய அறிவியல் துறையின் பேராசிரியர்கள் முன்னிலையில் உடற்கூராய்வு செய்யவும், அதனை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும் என்றும் மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, மகளின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என்றும் மனுவில் கூறியிருந்தார்.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தரப்பில், உயிரிழந்த கனிமொழியின் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி, உயிரிழந்த பெண்ணின் மருத்துவ அறிக்கையை அவரது குடும்பத்தினரிடமும் வழங்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 29க்கு ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com