கணவன் மீது சந்தேகம்.. தோழியைக் கொடூரமாக் கொலை செய்த மனைவி.. நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு !
செய்தியாளர் : என்.விஷ்ணுவர்தன்
நாகை மேலகோட்டைவாசல் நடராஜர் பிள்ளை தெருவை சேர்ந்தவர் கார்த்தீசன். இவர், அப்பகுதியில் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதால் இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவருக்குத் திருமணமாகி வள்ளி என்ற மனைவி உள்ளார். வள்ளிக்கு கார்த்திசன் வேறு ஒரு பெண்ணுடன் பழகிக்கொண்டிருக்கிறார் என சந்தேகம் வந்துள்ளது.
இதில் கார்த்திசனின் நண்பர் காளியப்பனின் மனைவி சுகன்யா மீதும் இவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வள்ளி தனது கனவனையும் சுகன்யாவையும் பழிவாங்கத் திட்டம் போட்டுள்ளார். அதன்படி கடந்த 2016ம் ஆண்டு காளியப்பனின் வீட்டிற்குச் சென்ற அவர் இதுகுறித்து சுகன்யாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சுகன்யா எவ்வளவு மறுத்தும் கேட்காததால் ஒருகட்டத்தில் இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றியுள்ளது.
ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற வள்ளி சுகன்யாவின் மீது கொதிக்கும் எண்ணெயை எடுத்து ஊற்றியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சுகன்யா நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சுகன்யாவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சுகன்யாவிடம் நாகப்பட்டினம் மாஜிஸ்ட்ரேட் மரண வாக்குமூலம் பெற்றுள்ளார். பின்னர் சிகிச்சை பலனின்றி சுகன்யா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது குறித்து காளியப்பன் அளித்த புகாரில் பேரில் நாகப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு நாகப்பட்டினம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் போக்சோ நீதிமன்ற நீதிபதி கார்த்திகா இன்று தீர்ப்பு வழங்கினார். அதில் வள்ளி குற்றவாளி என அறிவித்து அவருக்கு ஆயுள் தண்டனையும், 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்.