கிருஷ்ணகிரி | வீட்டில் இருந்தவர்களை தாக்கி நகை பணம் கொள்ளை – 5 பேர் கைது
செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த உத்தனப்பள்ளி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தொட்ட மெட்டரை கிராமத்திற்கு அருகே முதியவரும், மூதாட்டியும் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 14ம் தேதி இரவு, 7பேர் கொண்ட கும்பல் காரில் சென்று வீட்டில் இருந்தவர்களை தாக்கிவிட்டு மூதாட்டி கோவிந்தம்மாளை மிரட்டி அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, தோடு என 8.5 சவரன் தங்க நகை மற்றும் ரூ.3.20 லட்சம் பணத்தை பறித்துச் சென்றனர்.
இந்த வழக்கில் உத்தனப்பள்ளி சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் கார் எண்ணைக்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் வீட்டில் கொள்ளையிட்டுச் சென்ற தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த ராமன் (29), தமிழ் (19), எல்சின் ஜெபராஜ் (25), வெங்கட்ராமன் (37), பாண்டு என்கிற தமிழ்மணி (31) ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்
இதைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வீட்டில் மூதாட்டி முதியவர் மட்டும் இருப்பதை பலநாள் நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.