கரூர்: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: மாணவன் உட்பட இருவர் போக்சோவில் கைது
குளித்தலை அருகே பள்ளி மாணவிகள் சைக்கிளில் வீட்டிற்குச் செல்லும்போது முடியை பிடித்து இழுத்து கேலி கிண்டல் செய்த இருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நங்கவரம் பகுதியைச் சேர்ந்த மாணவிகள் அங்குள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் 3 மாணவிகள் சைக்கிளில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது கொசூர் கம்பளியம்பட்டியைச் சேர்ந்த வினோத் என்ற வினோத் குமார், மற்றும் இனுங்கூரைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவர் ஆகிய இருவரும் டாட்டா ஏசி வண்டியில் வெங்காயம் விற்பனை செய்து வந்தனர்.
இவர்கள் வாகனத்தை நிறுத்தி மாணவிகளின் முடியைப் பிடித்து இழுத்தும், தொந்தரவு செய்ததோடு இதை வெளியே சொன்னால் வண்டியை விட்டு ஏற்றி கொன்று விடுவதாகவும், மிரட்டியுள்ளனர். இதையடுத்து அந்த மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் கூறியதைத் தொடர்ந்து பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வினோத் குமார் மற்றும் 11ஆம் வகுப்பு மாணவன் ஆகிய இருவரையும் குளித்தலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்,
இதைத் தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர் கொடுத்த புகாரை அடுத்து குளித்தலை காவல் உதவி ஆய்வாளர் ரூபிணி இருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ வழக்குப்பதிவு செய்து குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.