கரூர்: போதையில் தகராறு: மகனை கண்டித்த தாய்க்கு நேர்ந்த கொடூரம்!
கரூர் அருகே மதுபோதையில் தாயை கடப்பாரையால் அடித்துக் கொலைசெய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்துள்ள ஜங்கால்பட்டியை சேர்ந்தவர் பழனியம்மாள் (60). இவரது மகன் முத்துராஜ் (35). இவர் தனியார் கம்பெனியில் வாட்ச்மேனாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் முத்துராஜ் பக்கத்து வீட்டில் உள்ள சக்திவேல் என்பவருடன் குடிபோதையில் தகராறு செய்துள்ளார்.
அப்போது, குடித்துவிட்டு ஏன் வீணாக தகராறு செய்கிறாய் என அவரது தாயார் பழனியம்மாள் மகனை கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த முத்துராஜ், வீட்டில் இருந்த கடப்பாரையை எடுத்து தன் தாயார் பழனியம்மாள் தலையில் அடித்துள்ளார். இதில் பலத்த காயமுற்ற பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த அரவக்குறிச்சி காவல்நிலைய போலீசார் முத்துராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.