காரைக்குடி: பேத்திகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தாத்தா உட்பட 4 பேர் கைது
காரைக்குடியில் நண்பர்களுடன் சேர்ந்து பேத்திகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த தாத்தா மற்றும் ஒரு பெண் உட்பட 4 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் செல்வம் (60). இவர், அதே பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார், இவரது மகளுக்கு திருமணமாகி கணவன் இறந்துவிட்ட நிலையில், அவர், வேறொருவரை திருமணம் செய்துகொண்டு தனியே சென்று விட்டார்.
இந்நிலையில், மகளுக்கு பிறந்த இரண்டு பெண் குழந்தைகள் தாத்தாவிடம் வளர்ந்துள்ளனர். தற்போது இரு பெண் குழந்தைகளுக்கும் 11, மற்றும் 12 வயதாகிறது. இந்த பெண் குழந்தைகளுக்கு அவர்களுடைய தாத்தா செல்வம் தனது பட்டறையில் வேலை பார்த்துவரும் இரண்டு ஊழியர்களுடன் சேர்ந்து கடந்த 2 வருடங்களாக பாலியல் துன்புறுத்தல் செய்துவந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பெண் குழந்தைகள் தனது தாயாரிடம் கூறியுள்ளனர். அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தைகளின் தாயார் இன்று காலை காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் செல்வத்தை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் சம்பவம் உண்மை என்று தெரியவந்ததையடுத்து, அவரது ஊழியர்கள் 2 பேர் மற்றும் உடந்தையாக இருந்த பெண் ஆகிய நான்கு பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.