கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகை திருடி கடல் வழியாக ஓட்டி சென்று தூத்துக்குடியில் விற்பனை செய்த வாலிபரை குளச்சல் போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு புதூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் கினிஷ்டன். இவர் தனக்கு சொந்தமான காசினி என்ற பைபர் படகில் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தார். கடந்த வியாழக்கிழமை மீன்பிடி தொழிலுக்கு சென்று கரை திரும்பிய கினிஷ்டன் 5-லட்சம் ரூபாய் மதிப்பிலான தனது பைபர் படகை எஞ்சினுடன் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைத்து விட்டு வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் மறுநாள் காலை வழக்கம் போல் மீன்பிடி தொழிலுக்கு செல்லவந்த அவர், துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது பைபர் படகு மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். இதனையடுத்து கினிஷ்டன் சம்பவம் குறித்து குளச்சல் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமான பைபர் படகை தேடி வந்த நிலையில், தூத்துகுடி மாவட்டம் வீரபாண்டிய பட்ணம் பகுதியை சேர்ந்த லிபர்டின் என்பவரிடம் இருப்பது தெரியவந்தது.
அங்கு சென்ற போலீசார் லிபர்டின் இடம் இருந்து பைபர் படகை மீட்டு விசாரணை நடத்தியதில், கன்னியாகுமரி மாவட்டம் பள்ளம் பகுதியை சேர்ந்த ரீகன் என்பவர் அந்த படகை கடல் வழியாக ஓட்டி வீரபாண்டிய பட்டணம் கொண்டு வந்து தன்னிடம் தனக்கு சொந்தமான படகு என்றும், தொழில் சரிவர இல்லாததால் படகை விற்பனை செய்து விட்டு வெளிநாடு செல்லப்போவதாகவும் என்னிடம் கூறி ரூ 2-லட்சத்திற்கு விலை பேசி பணத்தை பெற்று கொண்டு சென்றதாகவும் கூறினார்.
இதனையடுத்து படகை மீட்டு குளச்சலுக்கு டெம்போ மூலம் கொண்டு வந்த போலீசார் படகை கடத்தி சென்று விற்பனையில் ஈடுபட்ட பள்ளம் பகுதியை சேர்ந்த வாலிபர் ரீகன் மீது வழக்கு பதிவு செய்து மாயமான அவரை தேடி வருகின்றனர்.