கம்பத்தில் திருமணத்தை மீறிய உறவால் இளைஞரை கொலை செய்து உடல் ஆற்றில் வீச்சியதாக இளம் பெண் மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.
தேனி மாவட்டம் கம்பம் கூலத்தேவர் முக்கு தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (37). தனியார் நிதி நிறுவன ஊழியரான இவரை காணவில்லை என அவரது மனைவி கனிமொழி கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பிரகாஷின் செல்போன் எண்ணைக் கொண்டு விசாரணை நடத்தினர்.
அப்போது அதே தெருவில் உள்ள ஆட்டோ டிரைவர் வினோத் குமார் (34) மற்றும் அவரது மனைவி நித்யா (25) ஆகியோருடன் பிரகாஷ் அடிக்கடி பேசி இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், நித்யாவிற்கும் பிரகாசிற்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது உறுதியானது.
இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் பிரகாஷை, வீட்டிற்கு வரச் சொன்ன நித்யா வீட்டில் இருவரும் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த நித்யாவின் கணவர் வினோத்குமார் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த வினோத் குமார், பிரகாஷின் கழுத்தை துணியால் இறுக்கி கொலை செய்து, ஆட்டோவில் தூக்கிச் செல்ல நண்பரான ஆட்டோ ஓட்டுனர் ரமேஷ் என்பவரை அழைத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து மூவரும் சேர்ந்து பிரகாஷின் உடலை ஆட்டோவில் ஏற்றிச் சென்று கம்பம் அருகே உள்ள உத்தமபாளையம் முல்லை பெரியாற்றில் வீசியது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து நித்யா, அவரது கணவர் வினோத் குமார், நண்பர் ரமேஷ் ஆகிய மூவரையும். கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் லாவண்யா தலைமையிலான போலீசார் கைது செய்து பிரகாஷின் உடலை முல்லைப் பெரியாற்றில் தீயணைப்புத் துறையின் உதவியுடன் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருமணத்தை மீறிய உறவால் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.