ஐஏஎஸ் தேர்வில் காப்பியடித்த ஐ‌பிஎஸ் அதிகாரி கைது

ஐஏஎஸ் தேர்வில் காப்பியடித்த ஐ‌பிஎஸ் அதிகாரி கைது
ஐஏஎஸ் தேர்வில் காப்பியடித்த ஐ‌பிஎஸ் அதிகாரி கைது

வசூல்ராஜா எம்பிபிஎஸ் படப்பாணியில் சென்னையில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் யுபிஎஸ்சி முதல்நிலைத்தேர்வில் காப்பியடித்து எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஐ.பி.எஸ் அதிகாரியான சபீர் கரீமை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையில் ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. மத்திய தேர்வாணையம் நடத்தும் இந்த தேர்வுகள் இந்தியா முழுவதும் 24 நகரங்களில் நடந்து வருகின்றன. சென்னையில் மட்டும் 763 பேர் இத்தேர்வுகளை எழுதுகின்றனர். ‌இந்நிலையில், சென்னையில் பிரசிடென்சி பள்ளியில் நேற்று காலை நடந்த தேர்வின்போது, ப்ளு டூத் பயன்படுத்தி ஒருவர் தேர்வு எழுதுவதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எழும்பூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல்துறை இணை ஆணையர் மனோகரன் நேரில் வந்து விசாரணை நடத்தினார். அப்போது, ஷபீர் கரிம் என்பவர் ப்ளுடூத் பயன்படுத்தி தேர்வில் விடைகளை கேட்டு எழுதியது தெரியவந்தது.

ஹைதராபாத்தில் உள்ள தனது மனைவியிடம் கேள்விகளுக்கான விடைகளை கேட்டு ஷபீர் எழுதியுள்ளார். ‌அவரிடம் இருந்து செல்போன், ப்ளுடூத் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்ட ஷபீர் ஐபிஎஸ் பயிற்சி முடித்தவர். நாங்குநேரி சரக காவல் உதவி கண்காணிப்பாளராக பயிற்சியை முடித்த ஷபீருக்கு இ‌துவரை பணி ஒதுக்கப்படவில்லை.

இந்நிலையில் ஐஏஎஸ்‌தேர்வு எழுதிய ஷபீர், கடந்த சனிக்கிழமை நடந்த தேர்வின்போதே ப்ளுடூத் உதவியுடன் தேர்வு எழுதியதாகவும், இதுபற்றிய தகவலையடுத்தே மத்திய உளவுத்துறை அதிகாரிகள் ஷபீரை பிடித்துள்ளதும் தெரியவந்துள்ளது. அவர் மீது சட்டப்பிரிவு 420-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வில் ஷபீருக்கு உதவிய அவரது மனைவியை பிடிக்க தனிப்படை காவல்துறை ஹைதராபாத் விரைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com