மகன் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய தந்தை - விசாரணையில் அதிர்ச்சி

மகன் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய தந்தை - விசாரணையில் அதிர்ச்சி
மகன் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய தந்தை - விசாரணையில் அதிர்ச்சி

ஓமலூர் அருகே தந்தையே மகனை அடித்துக் கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினார். இந்த வழக்கில்  மகனை கொலை செய்த தந்தை உள்ளிட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தொளசம்பட்டி தாசன்காடு பகுதியைச் சேர்ந்தவர் தனபால். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் மீது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தனபால் மனைவி அவரை பிரிந்து சென்று வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து தொளசம்பட்டி பகுதியில் தனது தந்தையுடன் வசித்து வந்தார். மேலும், இவர் தினமும் மது குடித்துவிட்டு வந்து தாய் தந்தை உள்ளிட்டவர்களை அடித்து உதைத்து தகராறில் ஈடுபட்டு வருவது வழக்கமாக இருந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 1-ம் தேதி தனபால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தொளசம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

துகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார், தன்பால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், இவரது பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது இரண்டு கால்களை அடித்து உதைத்து கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து தொளசம்பட்டி போலீசார், சந்தேக மரண வழக்கை, கொலை வழக்காக மாற்றி, தனபாலின் தந்தை பெருமாள், பெருமாளின் அக்காள் மகன் சரண்ராஜ் (19) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், தன்பால் குடிபோதையில் கத்தியை எடுத்து கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டியதாகவும், அப்போது பெருமாள், சரண்ராஜ் இருவரும் பயந்து தங்களை கொலை செய்து விடுவார் என்று தனபாலை பிடித்துத் தள்ளி கழுத்தை நெரித்ததில் அவர் இறந்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், இதை மறைப்பதற்காக தனபால் உடலை தூக்கில் தொங்க விட்டதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து பெருமாள், சரண்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்த தொளசம்பட்டி போலீசார், ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com