திருமணமான மூன்றே நாளில் காதல் மனைவியை எரித்துக் கொன்ற கணவன்: மதுரையில் கொடூரம்
காதலித்து திருமணம் செய்த மனைவியை சந்தேகத்தால் திருமணமான மூன்றாவது நாளிலேயே கணவனே கொலை செய்து எரித்த கொடூரம் மதுரையில் நிகழ்ந்துள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட அவனியாபுரம் ரிங் ரோடு பகுதியில் உள்ள தனியார் வறுகடலை மில் அருகே முட்புதரில், எரிந்த நிலையில் இளம்பெண் உடல் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து நடைபெற்ற போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், அந்த பெண் சோழவந்தான் பகுதியை சேர்ந்த சகாய ராஜ் - செல்வமேரி தம்பதியினரின் மகள் கிளாடிஸ் ராணி (20) என்பது தெரியவந்தது. அவனியாபுரம் பெரியார் நகரைச் சேர்ந்த ஜோதிமணி என்பவரும் கிளாடிஸ் ராணியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கிளாடிஸ் ராணி கர்ப்பம் அடைந்ததால் இருவருக்கும் கடந்த 02.08.2021 ஆம் தேதி இருவீட்டாரும் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் முடிந்ததும் இருவரும் கிளாடிஸ் ராணியின் வீட்டிலேயே தங்கியுள்ளனர். இதையடுத்து கடந்த நான்காம் தேதி வெளியே சென்று வரலாம் என்று ஜோதிமணி, கிளாடிஸ் ராணியை அழைத்துள்ளார். இருவரும் கிளாடிஸ் ராணியின் பெற்றோரிடம் எதுவும் சொல்லாமல் வீட்டிலிருந்து வெளியே கிளம்பி சென்றுள்ளனர்.
இதனை அடுத்து மீண்டும் ஜோதிமணி மட்டும் தனியாக வீடு திரும்பி வந்த நிலையில், கிளாடிஸ் ராணியை காணவில்லை என கிளாடிஸ் ராணியின் பெற்றோர்களுடன் இணைந்து ஜோதிமணியும் ஊர்முழுக்க தேடுவது போன்று நாடகம் ஆடியுள்ளார். இதனை அடுத்து நான்காம் தேதி மாலை சோழவந்தான் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என்று பெற்றோர் புகார் செய்துள்ளனர்.
கிளாடிஸ் ராணியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல் துறையினர் ஜோதிமணி மீது சந்தேகம் அடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஜோதிமணியிடம் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. காதலித்து திருமணம் செய்த மனைவி கிளாடிஸ் ராணியின் கர்ப்பத்திற்கு தான் காரணமல்ல என்று சந்தேகம் அடைந்த ஜோதிமணி, அவனியாபுரம் பைபாஸ் பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் வைத்து கிளாடிஸ் ராணியின் கழுத்தை நெரித்து கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
மேலும், இந்த கொலை தனியாக செய்யப்பட்டதா அல்லது கூட்டாக சேர்ந்து செய்தார்களா என்பது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.