நாமக்கல்: காதல் மனைவியை கொலை செய்த கணவர் தப்பியோட்டம் - சந்தேகத்தால் நிகழ்ந்த துயரம்
பள்ளிபாளையம் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர் தன்னுடைய காதல் மனைவியின் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வரும் இவர், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும் இரண்டு வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில், ஆனந்தி தனது செல்போன் மூலம் வேறு ஒருவருடன் அடிக்கடி பேசி வருவதை கண்ட மணிகண்டன் சந்தேகமடைந்து கேட்டதால் அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆனந்தி, மணிகண்டனுடன் வாழ பிடிக்கவில்லை என்று கூறியதுடன் தனியாக போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆனந்தியின் மீது சந்தேகமடைந்த மணிகண்டன் நேற்று காலை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மகளிர் காவல் நிலையத்தில் இருவரையும் அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது ஆனந்தி, வேறு ஒருவரை காதல் செய்வதாகவும் அவருடன் தான் வாழ்வதாகவும் மணிகண்டனுடன் வாழப் போவதில்லை என கடிதம் எழுதி வைத்ததாக தெரிகிறது.
இந்நிலையில் இருவரையும் சமாதானம் செய்து வைத்த போலீசார் மீண்டும் திங்கட்கிழமை நேரில் ஆஜராக சொல்லி அனுப்பி வைத்தனர். வீட்டிற்குச் சென்ற இருவருக்கும் இடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் தனது காதல் மனைவி ஆனந்தியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.
இதுகுறித்து தகவலறிந்த பள்ளிபாளையம் போலீசார் ஆனந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய மணிகண்டனை வலைவீசி தேடி வருகின்றனர்.